| விளைந்த கள்ளையுமுடைய; விழுநீர் வேலி - மிக்க நீராகிய வேலியையுடைய; நாடு கிழவோன் - நாட்டையுடையோன் எ-று.
களிற்று மிசையோனாகிய இவன் யாரென்குவையாயின், நாடுகிழவோன்; இவன் களிறு மதம்பட்டது; அதனால் இவன் நோயின்றிப் பெயர்கவெனக் கூட்டி வினைமுடிவு செய்க. களிற்றுக்கு நாவாயோடுவமை எதிர்ப் படையைக் கிழித்தோடலும், திங்களோ டுவமை வாளோர் சூழத் தன் தலைமை தோன்றச் செல்லுதலுமாகக் கொள்க. தில்:விழைவின்கண் வந்தது. பெருநற்கிள்ளி களிறு கையிகந்து பகையகத்துப் புகுந்தமையால் அவற்குத் தீங்குறுமென் றஞ்சி வாழ்த்தினமையால், இது வாழ்த்தியலாயிற்று. இவற்குத் தீங்குறின் நமக்குத் தீங்குறுமென்னுங் கருத்தால், நோயிலனாகிப் பெயர்க வென்றாராயின் வாழ்த்தியலாகாது, துறையுடையானது பாட்டாமென வுணர்க. விளக்கம்: புலி நிறம், புலியினது தோல். பூம் பொறி - பொலி வினையுடைய தோலினது இணைப்பு. புலியினது வரியுடன் இணைப்பும் கலந்து அழகு செய்தலின் அதனைப் பூம்பொறி யென்றார். உரையிற் கொளுத்து என்றது, தோலினது தையல் இணைப்பை. இப் புலிநிறக் கவசத்தை, புலிப்பொறிப் போர்வை யென்றும் கூறுவர். மறலி - கூற்றுவன். களிற்றினுடைய நிறமும் தோற்றமும் வன்மையும் தோன்ற, மறலி யன்ன களிறு என்றவர். மீட்டும் அதற்கு நாவாயும் திங்களும் உவமை கூறியதற்குக் காரணம், களிற்றுக்கு.......கொள்க என்றார். சோழன் கருவூரை முற்றியிருக்கின்றானாதலால், பகைப் புலமாகிய கருவூரிடம் செல்லுங்கால் ஊர்ந்து செல்லும் களிறு மதம் பட்டது காணும் பகைவர்,அதனை அடக்க முயலாது சினம் மிகுவித்து, அதற்கும் ஊர்ந்துவரும் சோழற்கும் தீங்கு விளைவிப்பரென்ற கருத்தால், நோயிலனாகிப் பெயர்கதில் என்று வாழ்த்துகின்றார். இவற்குத் தீங்குறின் நமக்குத் தீங்குறும் என்றது, இவனுக்குத் தீங்குண்டாயின் இவனது ஆதரவு பெற்று வாழும் தம்மைப்போலும் பரிசிலருக்கும் ஆதரவின்றி யொழிதலால் தீங்குண்டாம் என்பதாம். தந்நலம் நோக்காது பிறர் நலமே பேணி வாழ்த்துவது வாழ்த்தியலாகும்.தமக்குத் தீங்குறுமென்று கருதிக்கூறின் வாழ்த்தியலாகாது, சோழன் பெருநற்கிள்ளியையே பாடும் செந்துறைப் பாடாண்பாட்டாய் முடியும் என்பதாம். தில்லென்னும் இடைச்சொல் விழைவுப்பொருளில் வந்தது; விழைவே காலம் ஒழியிசைக் கிளவியென், றம்மூன் றென்ப தில்லைச் சொல்லே (சொல்.இடை 5) என்பது தொல்காப்பியம். 14. சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் ஒருகால் கபிலரும் இக் கடுங்கோ வாழியாதனும் ஒருங்கிருந்த காலையின், இவ்வேந்தன் அவர் கையைப்பற்றி நுமது கை மிக மென்மையாகவுளதே! என வியந்து கூறினான்.அதுகேட்ட கபிலருள்ளத்தே, அவன் கூற்றே கருப்பொருளாகப் பாட்டொன் றெழுந்தது. அதுவே ஈண்டுக்காணப்படும் பாட்டு.
இப்பாட்டின்கண், அரசே, யானை யிவருமிடத்து அதன் தோட்டி தாங்கவும், குதிரையைச் செலுத்துங்கால் அதன் குசை பிடிக்கவும், தேர்
|