| பிறவும் செய்க என மாறிக் கூட்டுக. மாறு கொள் மன்னரும் வாழிய ரென்ற கருத்து, இவன் வென்று திறை கொள்வது அவருளராயி னென்பதாம். விறலிய ரென்றது, ஈண்டு முன்னிலைக் கண் வந்தது. வேண்டா வென்பது வினைமேனின்றதொரு முற்றுச் சொல். அன்னவை பிறவும் என்றது, பூசுவன, உடுப்பன, பூண்பன முதலாயினவற்றை வருவது நாடி யென்றோதி, ஐவனத்துக்கு வரும் இடையூறு நாடி யென்று அதனைக் காவ லென்பதனான் முடிப்பினும் அமையும்.
விளக்கம்: பிட்டங்கொற்றனும் அவன் இறையாகிய சேரமான் கோதையும் அவரொடு மாறுபட்டுப் பொரும் மன்னரும் வாழ்வதே நாம் வேண்டுவது; உணவு கருதி வருந்தன்மின்; அது தானே கிடைக்கும்என்றது, பிட்டங்கொற்றனது வள்ளன்மையால் விளைந்த பெருமிதம் பிட்டங்கொற்றன் தரும் உணவு குறையின், அவனிடத்தே அவன் இறைவனாகிய கோதை தரும் உணவு வந்து நம் பசி நீக்கும்; இவ்வாறு ஒருவர் தருவது குறையின், மற்றவர் தருவது நிறைக்கு மென்பது, காவலர் பெய்தீ நந்தின், திருந்துமணி நளியிரு ளகற்றும் என்பதனால் உள்ளுறுத் துரைத்தலின், வருபதம் நாடி என்னதூஉம் பரியல் வேண்டாஎன்றும், மாவள்ளீகைக் கோதைஎன்றும் கூறினார். பகை மன்னர் என்னாது மாறுகொண் மன்ன ரென்றது, பொருளால் மிக்குச் செருக்கி மாறுபடும் மன்னர் என்றவாறு. பொருள் மிகினல்லது மாறுகொள் உணர்வு பிறவாதென வறிக. அதனாற்றான் உரைகாரர்,மாறுகொள்.......அவருளராயினென்பதாம் என்றார். விறலியர் என்றது, அண்மை விளியாதலின் முன்னிலைக்கண் வந்த தென்றார். ஐவனத்துக்கு வருபதம் நாடிக் காவலைச் செய்பவரென முடிப்பினும் அமையும் என்பது.
173. சிறுகுடிகிழான் பண்ணன்
சிறுகுடி யென்பது, சோழநாட்டில் காவிரிக்கரையில் இருந்ததோர் ஊர். இச் சிறுகுடியில் வாழ்ந்த வேளாளர் தலைவன் இப் பண்ணன். இவன் போராண்மையும் கைவண்மையும் மிக வுடையவன். புலவர் பாடும் புகழ் பெற்ற இவனை மாற்றூர் கிழார் மகனார் கொற்றங்கொற்றனார், கோவூர்கிழார், செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார், மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் என்ற சான்றோர்கள் பெரிதும் பாராட்டிப் பாடியிருக்கின்றனர். தனக்கென வாழாப் பிறர்க் குரியாளன் பண்ணன்(அகம்.54) எனக் கொற்றங்கொற்றனாரும், இவனது பேராண்மையை வியந்து, வென்வேல் இலைநிறம் பெயர வோச்சி மாற்றோர்மலைமருள் யானை மண்டம ரொழித்த, கழற்கால் பண்ணன் (அகம்.177) என்று செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனாரும் கூறுவர். மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், ஒருகால் இவனைக் காணச் சென்றபோது இவன் ன அவரது இடுக்கண் இரியல் போக(புறம். 388) தான் உடையவற்றை நிரம்பக் கொடுத்துக் கொடை மேம்பட்டான். இப்பண்ணனுக்கும் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனுக்கும் நெருங்கிய நட்புண்டு. இக்கிள்ளிவளவனைக் காணச் சென்ற கோவூர்கிழார், அவன் இரவலர்க்கு வழங்கும் கொடை நலத்தைப் பாராட்டலுற்றுச் சிறுகுடி கிழான் பண்ணன் பால் அவன் கொண்டிருந்த நட்பு நலத்தையும் உடன் கூட்டி, கைவள்ளீகைப் பண்ணன் சிறுகுடி (புறம்.70) என்று பாராட்டியுள்ளார். |