| | காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே மாநிறை வில்லதும் பன்னாட் காகும் நூறுசெறு வாயினுந் தமித்துப்புக் குணினே வாய்புகு வதனினுங் கால்பெரிது கெடுக்கும் | 5 | அறிவுடை வேந்த னெறியறிந்து கொளினே | | கோடி யாத்து நாடுபெரிது நந்தும் மெல்லியன் கிழவ னாகி வைகலும் வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு பரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின் | 10 | யானை புக்க புலம்போலத் | | தானு முண்ணா னுலகமுங் கெடுமே.(184) |
திணை: பாடாண்டிணை. துறை: செவியறிவுறூஉ. பாண்டியன் அறிவுடை நம்பியுழைச் சென்ற பிசிராந்தையார் பாடியது.
உரை: காய் நெல் அறுத்துக் கவளங் கொளின் - காய்த்த நெல்லை யறுத்துக் கவளமாகக் கொள்ளின்; மா நிறை வில்லதும் - ஒரு மாவிற் குறைந்த நிலத்திற் கதிரும்; பல்நாட் காகும் - பல நாளைக்காகும்; நூறு செறு வாயினும் - நூறு செய்யாயினும்; தமித்துப் புக்கு உணின் - யானை தனித்துப் புக்கு உண்ணுமாயின்; வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும் - அதனது வாயின்கட் புகுந்த நெல்லினும் கால் மிகவும் கெடுக்கும்; அறிவுடை வேந்தன் - அப்பெற்றியே அறிவுடைய அரசன்; நெறி அறிந்து கொளின் - இறை கொள்ளும் நெறியை அறிந்து கொள்ளின்; நாடு கோடியாத்துப் பெரிது நத்தும் - அவன் நாடு கோடிப் பொருளினை யீட்டிக்கொடுத்துத் தானும் மிகவும் தழைக்கும்; கிழவன் மெல்லியனாகிய - வேந்தன் அறிவால் மெல்லியனாகிய; வைகலும் - நாடோறும்; வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு - தரமறியாத உறுதி கூறாது அவன் விரும்புவதனையே தானும் கூறும் ஆரவாரத்தையுடைய சுற்றத்தோடு கூடி; பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின் - அன்பு கெடக் கொள்ளும் பொருட்டொகுதியை விரும்பின்; தானும் உண்ணான் உலகமும் கெடும் - தானும் உண்ணப்பெறான் உலகமும் கெடும் எ-று.
பரிவு தவ என்றோதி, அக்குடிகட்கு வருந்த மிக வென்று உரைப்பாருமுளர். மெல்லியன் கிழவனாகி யென்றும் பாடம்.
விளக்கம்: மா, குழி, வேலி யென்பன நிலவளவை வகை. இருபது மா கொண்டது ஒரு குழி; நூறு குழி கொண்டது ஒரு வேலி. செய்யென்பது ஒரு தளை. கோடி, மிக்கதோர் அளவினைக் குறிப்பது. நந்தும், தழைக்கும்; |