பக்கம் எண் :

421

 

இப்பாட்டின்கண்,  இவர் காலத்துச் சான்றோர்சிலர் பரிசிற்றுறையிலும்
அகத்துறையிலும்  தம்  புலமை  வளத்தையும், போர்த்துறையில் மெய்
வளத்தையும்  பயன்படுத்தக்  கண்டு  நன்னெறிக்கண் பயன்படுத்துமாறு
அறிவுறுத்த  முற்பட்டு,   “நரைத்து முதிர்ந்த சான்றீரே,கூற்றுவன் போந்து
நும்   முயிரைப்  பற்றுங்கால் நீவிர் வருந்துவீர்கள்;  உங்களால்  மக்கட்கு
நல்லது செய்தல் இயலாதாயின், அவர்கட்குத் துன்பம் விளைக்கும் துறையில்
வேந்தர்களையும் பிறரையும் ஊக்குதலாகிய அல்லது செய்தலை ஒழியின்;
அதுவே  எல்லார்க்கும்  உவப்பைத்   தருவது; நன்னெறியுமாவது”எனத்
தெருட்டியுள்ளார்.

 பல்சான் றீரே பல்சான் றீரே
கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனின் மூப்பிற் பல்சான் றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
5பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமி னதுதான்
எல்லாரு முவப்ப தன்றியும்
நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே.
(195)

     திணை: அது. துறை: பொருண்மொழிக்காட்சி. நரிவெரூஉத்தலை
யார் பாடியது.

     உரை: பல் சான்றீரே பல் சான்றீரே - பல அமைந்த
குணங்களை யுடையீர், பல அமைந்த குணங்கை யுடையீர்; கயல்
முள் ளன்ன நரை முதிர் திரை கவுள் - கயலினது முட்போன்ற நரை
முதிர்ந்த திரைந்த கதுப்பினையும்; பயனில் மூப்பின் - பயனில்லாத
முதுமையையுமுடைய; பல் சான்றீர் - பல அமைந்த  குணங்களை
யுடையீர்; கணிச்சிக்   கூர்ப்படை  கடுந்திறல் ஒருவன் - மழுவாகிய
கூரிய படைக்கலத்தினையும் கடிய  வலியினையுமுடைய  ஒருவன்;
பிணிக்குங்   காலை  இரங்குவிர் - பாசத்தாற்   கட்டிக் கொண்டு
போங்காலத்து இரங்குவீர் நீர்; நல்லது செய்தல்  ஆற்றீராயினும் -
நல்வினையைச் செய்யமாட்டீராயினும்; அல்லது செய்தல்  ஓம்புமின்
- தீவினையைச் செய்தலைப் பரிகரிமின்; அதுதான் எல்லாரும்
உவப்பது - அதுதான் யாவரும் புகழ்வ ரென்றது; அன்றியும் -
ஒழியவும்; நல்லாற்றுப் படூஉம் நெறியும் அது - நல்ல நெறியின்
கண்ணே செலுத்தும் வழியும் அதுதான் எ-று.

     பலராகிய சான்றீரென்பது, பல்சான்றீரெனத் தொக்கது; “பல்குட்டுவர்”
(மதுரைக்.105) என்பதுபோல. பலவாகிய குணங்களால் அமைந்தீர்
எனினு மமையும். பயனின் மூப்பென்று வைத்துப் பல் சான்றீரே யென்றது,
இகழ்ச்சிக்குறிப்பு. அடுக்கு விரைவின்கண் வந்தது.