| ஒருகால், கூத்தரும் பாணரும் பொருநரும் புலவரும் விறலியருமாகிய இரவலர் பலரும் செல்வரைப் பாடி அவர் தரும் பரிசிலை இரந்து பெறுவதைத் தொழிலாகக் கொண்ட நாளும் கொடுக்கும் பண்புடைய செல்வரையே தேடித் திரிவதுபற்றிச் சான்றோரிடையே ஆராய்ச்சி யுளதாயிற்று. அவரிடையே யிருந்த நம் பெரும் பதுமனார், அதற்கு முடிவு கூறுவாராய், ஆலமரம் பழுத்த காலத்து அதனைப் புள்ளினம் பலவும் சேர்ந்துண்டு மகிழும்; நெருநற் போந்து உண்டோமாகலின், இன்று வேறு மரத்துக்குச் செல்வே மென்னாது, நாடோறும் அம் மரத்தையே யடைந்துண்டு, அம்மரம் பழ முழுதும் ஒழிந்த காலத்தே வேறு பழு மரம் நாடிச் செல்லும்; இரவலரும் பழந்தேர்ந் துண்ணும் பறவை போலும் இயல்பினர். தம்மை விரும்பி வரவேற்றுப் பேணும் வண்மை யுடையோரைச் சூழ்ந்திருந்து அவர் செல்வத்தைத் தமதாகக் கருதி யுண்டலும், அவரது வறுமையைத் தமது வறுமையாகக் கருதி யமைதலும் இரவலர்கட்கு இயல்பு என்று இப் பாட்டைப் பாடினர்.
| கடவு ளாலத்துத் தடவுச்சினைப் பல்பழம் நெருந லுண்டன மென்னாது பின்னும் செலவா னாவே களிகொள் புள்ளினம் அனையர் வாழியோ விரவல ரவரைப் | 5 | புரவெதிர் கொள்ளும் பெருஞ்செய் யாடவர் | | உடைமை யாகுமவ ருடைமை அவர்; இன்மை யாகு மவரின் மையே. (199) |
திணையுந் துறையு மவை. பெரும் பதுமனார் பாட்டு.
உரை : கடவுள் ஆலத்துத் தடவுச் சினைப் பல் பழம் - தெய்வ முறையும் ஆலமரத்தினது பெரிய கொம்பின்கட் பல பழத்தை; நெரு நல் உண்டனம் என்னாது - நென்னலுமுண்டே மென்னாவாய்; பின்னும் செலவு ஆனா கலி கொள் புள்ளினம் - பின்னும் அவ்விடத்துப் போதலை யமையா ஒலி பொருந்தின புள்ளினம்; அனையர் இரவலர் - அத்தன்மையினையுடையார் இரப்போர்; அவரைப் புரவெதிர் கொள்ளும் பெருஞ் செய் யாடவர் உடைமை யாகும் - அவரைக் காத்தற்கு எதிர்ந்துகொள்ளும் மிக்க செய்கையையுடைய ஆண் மக்களது செல்வமாகும்; அவர் உடைமை - அவ்விரப்போர் செல்வம்; அவர் இன்மையாகும் அவர் இன்மை - அவ் வாண்மக்களுடைய வறுமையாகும் அவ்விரப்போருடைய வறுமை எ-று.
வாழியும் ஓவும் அசைநிலை.
விளக்கம்: ஆலமரத்திற் கடவுள் உறையு மென்பது வழக்கு. துறையு மாலமும் தொல்வழி மராமும், முறையுளிப் பராய்(கலி.104) என்று சான்றோர் கூறுதல் காண்க. கடவுள் ஆலத்தின் தடவுச் சினை பூத்துக் காய்த்துப் பழுத்தல் கடன்; அது பழமுடைத்தாதலைத் தேர்ந்து போந்துண்டல், புள்ளினம் அப் பழங்களைச் செய்துகொள்ளமாட்டாமையான் இறைவன் படைத்த அமைப்பு. |