| 18. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இப் பாண்டியனது இயற்பெயர் நெடுஞ்செழியன் என்பது. லையாலங்கானம் என்னுமிடத்தே தன்னை யெதிர்த்த முடிவேந்தர் இருவரும் வேளிர் ஐவருமாகிய எழுவரை வென்று மேம்பட்டது கொண்டு தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எனச் சிறப்பிக்கப்பட்டான். மாங்குடி மருதனார் முதலிய சான்றோரிடத்தே பெருமதிப்பும் அன்பும் உடையவன். அவர் பாடிய மதுரைக்காஞ்சிக்கும் தலைவன் இவனே. யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறையை வென்று சிறைப்படுத்தியதும், வேள் எவ்வியின் மிழலைக் கூற்றத்தையும் முதுவேளிர்கட்குரிய முத்தூர்க்கூற்றத்தையும் வென்று தான் கைப்படுத்திக் கொண்டதும் இவனுடைய போர்ச் செயல்களாகும். தன்னை யெதிர்த்த வேந்தரொடு பொரச் சென்றபோது இவன் வழங்கிய வஞ்சினப்பாட்டு இத்தொகைநூற்கண் உள்ளது. இவனைக் குறுங்கோழியூர் கிழார், குடபுலவியனார், கல்லாடனார், மாங்குடி கிழார், இடைக்குன்றூர் கிழார் முதலியோர் பாடியுள்ளனர். இவனைப் பாண்டியன் நெடுஞ் செழியனென்றும் கூறுவர். இவன் வேறு; கோவலனைக் கொலைபுரிவித்த நெடுஞ்செழியன் வேறு.
குடபுலவியனார் என்னும் சான்றோர் இப்பாண்டியனை இப்பாட்டாலும் வரும் பாட்டாலும் சிறப்பித்துப் பாடுகின்றார். புலவியன் என்பது இவரது இயற்பெயர். குடநாட்டவராதலால், குடபுலவியனார் எனப்பட்டார். புலவியன் என்பது விரிந்த அறிவுடையவனென்னும் பொருள்பட வருந் தமிழ்ச் சொல்லாதலால், புலத்தியனென்னும் வடசொற்றிரிபெனக் கூறுவது மடமையாகும்.
இப் பாட்டின்கண், தாம் பாண்டிநாட்டின் மேற்குபகுதியில் வாழ்பவராதலாலும், அப்பகுதி நீர்நிலையின்றி விளைநிலம் குன்றி வாடுதலாலும், நீர்நிலை பெருக அமைக்க வேண்டுமெனப் பாண்டியற் குணர்த்தக் கருதி வயவேந்தே, நீ மறுமைப்பேறாகிய துறக்க வின்பம் வேண்டினும், இம்மைக்கண் உரு பேரரசனாய்ப் புகழெய்த வேண்டினும், நாட்டில் நீர்நிலை பெருக அமைக்க வேண்டும்; வித்தி வானோக்கும் புன்புலம் வேந்தன் முயற்சிக்கு வேண்டுவ உதவாது; ஆகவே நீர்நிலை பெருக அமைப்பாயாக வென வற்புறுத்துகின்றார். அரசன்பால் பொருள்வளம் குன்றாது மேன்மேலும் பெருகுதற்குரிய செயன்முறைகளை அவர்கட்கு அறிவுறுத்துவது கடமையாகும். ஆதலால், ஈண்டுக் குடபுலவியனார், நாடு வளம் மிகுவது குறித்து நீர்நிலை பெருகச் செய்க என அறிவுறுத்துகின்றார். சேரமான் கோதை யென்பாற்குத் தானைத் தலைவனான பிட்டங்கொற்றனென்பான் மாறுபடும் மன்னரை வென்று அவர் தரும் பொருள் வளத்தைப் புலவருக்கு நல்கிப் புகழ்பெறக் கண்ட வடம வண்ணக்கன் தாமோதரனார் என்னும் சான்றோர், அவனது பொருள் வளம் குன்றாமை வேண்டி, வயமான் பிட்டன் ஆரமர் கடக்கும் வேலும் அவன் இறைமாவள்ளீகைக் கோதையும், மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே (புறம்:172) என்று வாழ்த்துவது இக்கருத்தை நாம் நன்கு தெளிய வற்புறுத்துகின்றது.
|