பக்கம் எண் :

57

    

     விளக்கம்: ஈண்டுதல்   செறிதல்   என்னும்   பொருளதாகலின்,
ஈண்டகன் கிடக்கை யென்பதற்கு அணுச் செறிந்த அகன்ற உலகம் என்று
கூறினார். அணு - மண். “மண் திணிந்த நிலனும்”  (புறம்.2)   என்பதன்
உரை காண்க. தமிழ்ப்படை, வென்றோர் படையும்  தோற்றோர் படையும்
தமிழகத்துப் படையாதலால், “தமிழ்ப்  படை”யென்றார். தலை   மயங்கிய
என்புழி, தலை, அசைநிலையாகக் கொண்டமையின், மயங்கிய என்பதற்குக்
கைகலந்த   என்றுரைத்தார்.  இனி, தமிழ்   தலையென்று    கொண்டு,
தமிழகத்திடத்தே மயங்கிய என்று பொருள்கொள்ளற்கும் இடமுண்மையின்,
“தலை, இடமுமாம்” என்றார். உயிர்கள் பல வாயினும் கூற்றொன்றே நின்று
அவை பலவற்றையும் உண்டலிற் சலியாமை போல,இப்பாண்டியன் ஒருவனே
நின்று  பகைவர்   பலரையும்    வெல்லது   அமையுமெனக்   கருதிப்
போருடற்றுகின்றான்  என்பது விளங்க, “நின்னொடு  தூக்கிய  செழிய”
என்றார். அடார்,  கருங்கற்   பாறைகளின்   இணைப்பு; கற்பலகையுமாம்.
பொறியறிந்து மாட்டிய பெருங்கல்  அடார் - மலை நாட்டவர் பாறைகள்
செறிந்த குன்றுகளில் முழைகள் கண்டு, அவற்றின் வாயிலில் கற்பலகையால்
கதவமைத்து, உள்ளே ஆடுகளைக் கட்டிப் புலிகளை அதனுட் புகுவித்து,
அவை ஆடுகளைத் தாக்கியவழி வாயிற் கதவாகிய கற்பலகை விரைய மூடிக்
கொள்ளுமாறு   பொறியமைத்து   வைப்பது.   இவ்வடார்,   புலியை
அகப்படுத்தற்கேயன்றி,   வெயில் காற்று மழை முதலியவற்றின் மறைதற்கு
இடமாய் வேட்டுவற்  கின்பம்  செய்யும்.  உம்மை, எச்சவும்மையாயிற்று.
பகைவரைப் படுக்கும்  ஆண்மைச் சிறப்பை  விளக்குதலால்,  சிறப்பும்மை
என்றலும் பொருந்தும் என்றற்குச் “சிறப்பும்மையுமாம்” என்றார்.புனத்திடத்தே
தங்கும்  குரீஇயினம்  மலையிடத்தே தங்குதற்குக் காரணம் இது வென்பார்,
“மயங்கி யென்றார்.  மலையிடத்துத்  தங்கிய  குரீஇயினம் போல வீரர்
மார்பிடத்தே  தங்கிய  அம்பு தோன்றும் என வறிக. “மயங்கி.....நமக்கு”
என்பது மூதில் மகளிர் கூற்று.  இறுத்தலாலுண்டாகிய புண்ணை, இறுத்த
புண்ணென்றார். மூதில் மகளிர்க்குத் துயர் தருவது மற மானங்களின்
இழப்பே தவிர உயிரிழப்பன்மையின்,கசிந்து அழ என்பதற்கு,“உவகையுற்றழ”
வென்றார். அணி, தற்குறிப்பேற்றம். மானமுடைய மறக்குடியிற் பிறந்தவர்
உணர்வில்லாத விலங்காகு மென்று கருதி யானையைக் கொல்வதும், பிறரால்
தாக்குண்டு மிச்சிற் பட்டாரெனப்  போர்ப்புண்  பட்ட  வீரரை   வெல்வதும்,
ஒத்த மாறுபாடு இல்லாதவரென்று நினைந்து தமக்கு இளையவரை வெல்வதும்,
தம்மின் மூத்தவரொடு பொருவது போர் நெறி யன்றென எண்ணி அவரை
வெல்வதும், மறத்திற்கு இழிபு என்று கருதுவர்; இதனை, “வீறின்மையின்
விலங்காமென மதவேழமு மெறியான், ஏறுண்டவர் நிகராயினும்
பிறர்மிச்சிலென் றெறியான், மாறன்மையின் மறம் வாடுமென் றிளையாரையும்
எறியான், ஆறன்மையின் முதியாரையு மெறியான் அயில் உழவன்”
(சீவக.2261) என்று சான்றோர் கூறுதல் காண்க. இதனாற்றான், இவ்வுரைகாரர்,
“அம்புதைத்த யானையை வெட்டிப் படுத்தல் மறத்திற் கிழிபென்று பெண்டிர்
இரங்கி யழுதலின் கூற்றுக் கண்டு நாணிக் கண்ணோடியதென் றுரைப்பாரு
முளர்” என்றார். “தானால் விலங்கால் தனித்தால் பிறன்வரைத்தால், யானை
யெறிதல் இளிவரவால் - யானை, ஒருகை யுடைய தெறிவலோ யானும், இருகை
சுமந்துவாழ் வேன்” (தொல். புறத்.5, நச்சி. மேற்.) என்பது ஈண்டு
நினைவுகூரத்தக்கது.