| அளந்தறியினும் - வரையறுத்தறியினும்; அளத்தற் கரியை - வரையறுத்தற் கரியை; அறிவும் ஈரமும் பெருங் கண்ணோட்டமும் - அறிவும் அன்பும் மிக்க கண்ணோட்டமும்; சோறு படுக்கும் தீயோடு - ஆகலான் சோற்றையாக்கும் நெருப்புடனே; செஞ் ஞாயிற்றுத் தெறலல்லது பிறிது தெறல் அறியார் - செஞ்ஞாயிற்றினது வெம்மையல்லது வேறு வெம்மை யறியார்; நின் நிழல் வாழ்வோர் - நின் குடைநிழற்கண் வாழ்வோர்; திரு வில் அல்லது கொலை வில் அறியார் - இந்திரவில் லல்லது பகைவரது கொலைவில்லை யறியார்; நாஞ்சில் அல்லது படையும் அறியார் - கலப்பை யல்லது வேறு படைக்கலமும் அறியார்; திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய - போர் செய்யும் கூறுபாட்டை யறியும் வீரருடனே பகைவர் மாய; அப்பிறர் மண் உண்ணும் செம்மல் - அம்மாற்றாருடைய மண்ணைக் கொண்டுண்ணும் தலைவ; நின் காட்டு வயவுறு மகளிர் வேட்டுணின் அல்லது - நின்னுடைய நாட்டின்கண் வேட்கை நோயுற்ற பெண்டிர் விரும்பி உண்ணினல்லது; பகைவர் உண்ணா அருமண்ணினை - பகைவர் உண்ணப்படாத பெறுதற்கரிய மண்ணை யுடையை; அம்பு துஞ்சும் கடியரணால் - அம்பு தங்கும் காவலை யுடைய அரணுடனே; அறம் துஞ்சும் செங்கோலை - அறம் தங்கும் செவ்விய கோலையுடையை; புதுப்புள் வரினும் பழம் புள் போகினும் - புதுப்புள் வரினும் பழைய புள் அவ்விடத்தை விட்டுப் போகினும்; விதுப்புறவு அறியா ஏமக்காப்பினை - அவற்றால் நடுக்கமுறுத லறியாத சேமமாகிய காவலை யுடையை; அனையை யாகன்மாறு-அத்தன்மையையுடையையாதலான்; மன்னுயி ரெல்லாம் - உலகத்து நிலைபெற்ற உயிரெல்லாம்; நின் அஞ்சும்மே - தத்தம் காதலால் நினக்கு ஏதம் வருங்கொல் என்று அஞ்சும் எ-று.
அறிவும் ஈரமும் கண்ணோட்டமும் என்பன சினைவினைப் பாற்பட்டு அளத்தற் கரியை யென்னும் முதல்வினை கொண்டன.
விளக்கம்: ஆகாயம், முதற்குறைந்து காயமென நின்றது. அதன்கண் காற்றும் கிடையாதாதலால், வறிது நிலைஇய காயம் என்றார். இக்கால வான நூலாரும் இஃதுண்மை யென்பர். பெருங் கண்ணோட்டம் என்பதற்கு மிக்க கண்ணோட்ட மென்றார். நீரின் குட்டமும் நிலத்தின் அகலமும் காற்றின் திசையும் காயத்தின் வறுமையும் என்றதற்கேற்ப, இவன் பால் அறிவும், ஈரமும், பெருமையும், கண்ணோட்டமும் அளத்தற்கரியன என்று கூறல் பொருத்தமாகும். பெருங்கண்ணோட்டம் கழிகண்ணோட்டமன்று.பிறர் மண் உண்டலாவது பிறர் மண்ணைக் கொண்டல்லது உண்டி கொள்ளே னென்றிருந்து கொண்டபின் உண்டல்; வெவ்வரி நிலைஇய எயிலெறிந் தல்லது, உண்ணா தடுக்கிய பொழுது பலகழிய (பதிற்.68) என்று சான்றோர் கூறுதல் காண்க. புதுப்புள் வருதலும் பழம்புள் ஏகுதலும் தீ நிமித்தமாகக் கருதுபவாதலின், புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்
|