பக்கம் எண் :

66

    

பட்ட என்றவிடத்து வாய் காவாமைக்கேது கூறப்படாமையால், “படைப்
பெருமையால் பகைவ ருட்கும்  மதிப்புடைமையின்” என்பது   பெய்து
கூறப்பட்டது. வாய் - இடம்; “எவ்வாயும்” (கலி. 30) என்றாற்போல, விறல்
வெஞ்சேய்   என்புழி   வெம்மை   வேண்டல்  (விரும்புதல்)  என்னும்
பொருளினதாகையால் வெற்றியை, விரும்பும் சேய் என்று பொருள் கூறினார்.
கதிர் சோரும் மதி யென்பதில், சோரும் என்பது கதிரின் வினை; அக் கதிர்
மதிக்குச்   சினையாதலால்,  சினைக்கும்  முதலுக்குமுள்ள  ஒற்றுமையால்
சோருமென்னும் சினைவினைப் பெயரெச்சம் மதி யென்னும் பெயர்கொண்டு
முடிந்தது; இதனை,  “கதிர் சோரும்.......முடிந்தது”  என்றார்.  மதிபோலும்
குடையென இயைவதற்கேற்ப,  கதிர்   சோரும்   மாலை,  வானுறையும்
மதிபோலும் வெண் குடை யென இயைத்தாலும் பொருள் நலம் குன்றாமை
பற்றி, “கதிர் சோரும் மாலை யென இயைப்பினு மமையும்” என்றார். கூரை
பொலிவு தோன்ற என்றதில், தோற்றுதல் பொலிவின்  வினை;  கூரைக்கும்
பொலிவுக்கும் இடமும்  இடத்துநிகழ் பொருளுமாகிய தொடர்பு; அதனால்
இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்துமேல் நின்றதென்றார். பனைப்
போழ், பனந்   தோடு.   செரீஇ   யென்னும்   வினையெச்சம் குரவை
யென்பதனோடு  இயையாமையால், ஆடும் என ஒரு சொல்  வருவித்து,
செரீஇ,   ஆடும் குரவை   யென்றார். இசின்   என்பது   முன்னிலைக்
குரித்தாயினும் ஏனையிடத்துக்கும் “தகும் நிலையுடைய” வென்பவாதலால்
“தன்மைக்கண் வந்த” தென்றார். நீ சோறுபட நடத்தித் துஞ்சாய் எனக்
கொள்ளலும் பொருந்தும்.


23. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியன்


     இப்பாட்டின்கண் ஆசிரியர் கல்லாடனார்,  இப்  பாண்டியனுடைய
படையிலுள்ள   யானைகளாற்    கலக்கப்பட்ட  பகைவர்  நாட்டு  நீர்த்
துறைகளையும், வில் வீரர் தாம்  கொள்வது  கொண்டு   எஞ்சியவற்றை
யழித்துப் பாழ் செய்த புலங்களையும்,  ஊர்தோறும் கடிமரம் தடியப்பட்ட
மாக்களையும் எரி பரந்தெடுத்த இடங்களையும் கண்டு, இனியும் பகைமை
செய்யும் பகைவர்   நாட்டில் இன்ன பல    செய்கைகளைச்  செய்யும்
துணிவேயுடையன்    இப்பாண்டியன்   என்று    உட்கொண்டு  ஆள்
வழங்குதலின்றிப் பாழ்பட்ட காட்டு வழியே வருபவர் நின்னைக்
கண்டனென்  வருவலென உரைக்கின்றார்.

 வெளிறி னோன்காழ்ப் பணைநிலை முனைஇக்
களிறுபடிந் துண்டெனக் கலங்கிய துறையும்
கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியற்
சூர்நவை முருகன் சுற்றத் தன்னநின்
 5. கூர்நல் லம்பிற் கொடுவிற் கூளியர்
  கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில்
கொள்பத மொழிய வீசிய புலனும்
வடிநவி னவியம் பாய்தலி னூர்தொறும்