பக்கம் எண் :

81

    
 பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர்
ஆடுகளங் கடுக்கு மகநாட் டையே
15. அதனால், அறனும் பொருளு மின்பமு மூன்றும்
  ஆற்றும் பெருமநின் செல்வம்
ஆற்றா மைந்நிற் போற்றா மையே. (28)

     திணை:  பொதுவியல்.   துறை:   இயன்மொழி    வாழ்த்து;
முதுமொழிக் காஞ்சியுமாம். அவனை அவர் பாடியது.

     உரை: சிறப்பில்  சிதடும்  - மக்கட் பிறப்பிற் சிறப்பில்லாத
குருடும்; உறுப்பில் பிண்டமும் - வடிவில்லாத தசைத் திரளும்;கூனும்
குறளும் ஊமும் செவிடும் மாவும் மருளும் உளப்பட-;  வாழ்நர்க்கு-
உலகத்து உயிர் வாழ்வார்க்கு; எண் பேர்   எச்சம் என்ற  இவை
யெல்லாம் - எட்டு வகைப்பட்ட பெரிய எச்சமென்று சொல்லப்பட்ட
இவையெல்லாம்; பேதைமை யல்லது - பேதைத்   தன்மையுடைய
பிறப்பாவதல்லது; ஊதிய மில்லென - இவற்றாற் பயனில்லை யென;
முன்னும்  அறிந்தோர்   கூறினர் -  முற்காலத்தும்  அறிந்தோர்
சொன்னார்;  இன்னும் அதன் திறம் யான் உரைக்க வந்தது -
இன்னமும் அவ்வூதியத்தின் பாகுபாட்டை யான் சொல்ல வந்தது;
வட்ட வரிய  செம்பொறிச்  சேவல்  -  வட்டமாகிய  வரியை
யுடைத்தாகிய   செம் பொறியையுடைய காட்டுக் கோழிச் சேவல்;
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் -தினைப்புனங் காப்போரைத்
துயிலுணர்த்துவதாகக்   கூவும்;  கானத்தோர்  நின்  தெவ்வர் -
காட்டின்கண் உள்ளோர் நின்னுடைய பகைவர்; நீயே - நீ தான்;
புறஞ்சிறை மாக்கட்கு -வேலிப்புறத்து நின்று வேண்டிய மாக்கட்கு;
அறம் குறித்து - அறத்தைக்   கருதி;  அகத்தோர் புய்த்  தெறி
கரும்பின் விடு கழை - அகத்துள்ளோர்  தாம் பிடுங்கி யெறியும்
கரும்பாகிய போகடப்பட்ட கழை; தாமரைப்  பூம் போது சிதைய
வீழ்ந்தென - வாவியகத்துத் தாமரையினது  பொலிந்த பூச் சிதற
வீழ்ந்ததாக; கூத்தர் ஆடு களம் கடுக்கும் அக நாட்டை - அது
கூத்தர் ஆடு களத்தை யொக்கும் உள்ளாகிய நாட்டையுடையை;
அதனால் -  ஆதலான்; அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும்  நின் செல்வம்   - அறனும்   பொருளும்   இன்பமு
மென்னப்பட்ட மூன்றும் செய்வதற்  குதவும்  நினது   செல்வம்;
பெரும-; ஆற்றாமை  நிற்   போற்றாமை   உதவா  தொழிதல்
நின்னைப் பாதுகாவாமை எ-று.


     பிண்ட மென்பது மணை போலப் பிறக்குமது. மா வென்பது விலங்கு
வடிவாகப் பிறக்குமது. மரு ளென்பது அறிவின்றியே மயங்கி யிருக்குமது.
ஊதிய மென்பது, அறம் பொரு ளின்பங்களை; அன்றி அறமென்பாரு முளர்.