| 25. | நகைப்புற னாகநின் சுற்றம் | | இசைப்புற னாகநீ யோம்பிய பொருளே. (29) | திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.
உரை: அழல் புரிந்த அடர் தாமரை - எரியா லாக்கப்பட்ட தகடாகச் செய்த தாமரைப் பூவுடனே; ஐது அடர்ந்த நூல் பெய்து - ஐதாகத் தட்டிக் கம்பியாகச் செய்த நூலின் கண்ணேயிட்டு; புனை வினைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல் - அலங்கரித்த தொழிலாற் பொலிந்த பொன்னான் இயன்ற நறிய மாலையை; பாறு மயிர் இருந் தலை பொலியச் சூடி - பாறிய மயிரையுடைய கரிய தலை பொலிவு பெறச் சூடி; பாண் முற்றுக நின் நாள் மகிழ் இருக்கை - பாண் சுற்றம் சூழ்வதாக நினது நாட் காலத்து மகிழ்ந்திருக்கும் ஓலக்கம்; பாண் முற்று ஒழிந்த பின்றை - பாண் சுற்றம் சூழ லொழிந்த பின்னர்; மகளிர் தோள் முற்றுக நின் சாந்து புலர் அகலம்- நினது உரிமை மகளிருடைய தோள் சூழ்வதாக நின் சாந்து புலர்ந்த மார்பம்; முனிவில் முற்றத்து இனிது முரசு இயம்ப - எப்போதும் வெறுப்பில்லாத அலங்காரத்தையுடைய கோயில் முற்றத்தின் கண்ணே இனிதாக முரசு ஒலிப்ப; கொடியோர்த் தெறுதலும் செவ்வியோர்க்கு அளித்தலும் ஒடியா முறைமையின் - தீயோரைத் தண்டஞ் செய்தலும் நடுவு நிலைமை யுடையோர்க்கு அருள் பண்ணுதலுமாகிய இடையறாத முறைமையால்; மடிவிலை யாகி - சோம்புதலையுடைய யல்லையாகி; நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை என்போர்க்கு - நல்வினையினது நன்மையும் தீவினையினது தீமையும் இல்லையென்று சொல்லுவோர்க்கு; இனனாகிலியர் - இனமாகா தொழிவாயாக; நெல் விளை கழனிப் படுபுள் ஒப்புநர் - நெல் விளைந்த வயலிடத் துளதாகிய புள்ளை யோட்டுவோர்; ஒழி மடல் விறகில் கழி மீன் சுட்டு - வீழ்ந்த பனங்கருக்காகின்ற விறகால் கழிக்கண் மீனைச் சுட்டு; வெங்கள் தொலைச்சியும் அம்மையார் - அதனுடனே வெய்ய மதுவையுண்டு தொலைத்தும் அமையாராய்; தெங்கின் இளநீர் உதிர்க்கும் - தெங்கினது இளநீரை யுதிர்க்கும்; வளமிகு நன்னாடு பெற்றனர் உவக்கும் - செல்வ மிக்க நல்ல நாட்டைப் பெற்று மகிழும்; நின் படை கொள் மாக்கள் - நின்னுடைய - படைக்கலம் பிடித்த மாந்தர்; பற்றா மாக்களின் - நின்னுடைய பகைவரைப் போல; பரிவு முந்துறுத்து - இரக்கத்தை முன்னிட்டுக்கொண்டு; கூவை துற்ற -கூவை இலையால் வேயப்பட்ட; நாற்கால் பந்தர் சிறு மனை வாழ்க்கையின் ஒரீஇ - நான்கு காலையுடைய பந்தராகிய சிறிய இல்லின்கண் வாழும் வாழ்க்கையினின்று நீங்கி;
|
|
|
|