பக்கம் எண் :

90

    

32. சோழன் நலங்கிள்ளி

     ஆசிரியர் கோவூர் கிழார் இப்பாட்டின்கண், சோழன் நலங்கிள்ளியின்
வள்ளன்மையை வியந்து, “இத் தண்பணை நாடு அவன் கருதிய முடிபே
யுடையதாதலால், அவன் வஞ்சியும் மதுரையும் தருவன்;அவனை 
நாமெல்லாம் பாடுவோம் வம்மின்” என்று பாராட்டுகின்றார்.

 கடும்பி னடுகல நிறையாக நெடுங்கொடிப்
பூவா வஞ்சியுந் தருகுவ னொன்றோ
வண்ண நீவிய வணங்கிறைப் பணைத்தோள்
ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகென
5. மாட மதுரையுந் தருகுவ னெல்லாம்
 பாடுகம் வம்மினோ பரிசின் மாக்கள்
தொன்னிலக் கிழமை சுட்டி னன்மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமட் குரூஉத்திரள் போலவவன்
10.கொண்ட குடுமித்தித் தண்பணை நாடே. (32)

      திணை: பாடாண்டிணை. துறை: இயன்மொழி. அவனை அவர்
பாடியது.

     உரை: கடும்பின் அடு கலம் நிறையாக - நம் சுற்றத்தினது
அடுகலத்தை நிறைக்கும் பொருட்டு  விலையாக; நெடுங்  கொடிப்
பூவாவஞ்சியும் தருகுவன் - நெடிய துகிற்கொடியினையுடைய பூவாத

வஞ்சியையும் தருகுவன்; வண்ணம்  நீவிய - நிறமுடைய  கலவை
பூசப்பட்ட; வணங் கிறைப் பணைத் தோள் ஒண்ணுதல் விறலியர் -
வளைந்த சந்தினையுடைய முன்  கையினையும்  வேய்   போன்ற
தோளினையும் ஒள்ளிய  நுதலினையுமுடைய   விறலியர்;  பூவிலை
பெறுக என - பூவிற்கு விலையாகப் பெறுகவென்று; மாட மதுரையும்
தருகுவன் - மாடத்தையுடைய மதுரையையும்  தருவன்  ஆதலால்;
எல்லாம் பாடுகம் வம்மினோ பரிசில் மாக்கள்  - யாமெல்லாம்
அவனைப் பாடுவோமாக வாரீர், பரிசின் மாக்காள்; தொன்னிலக்
கிழமை சுட்டின் - பழைய நிலவுரிமையைக் குறிப்பின்; நன்மதி
வேட்கோச் சிறாஅர் -  நல்ல   அறிவையுடைய   குயக்குலத்
திளையோர்;தேர்க் கால் வைத்த  பசுமண்  குரூஉத் திரள் போல -
கலம் வனைதற்குத் திகிரிக் கண்ணே வைத்த பச்சை மண்ணாகிய
கனத்த திரள் போல; அவன்  கொண்ட  குடுமித்து - அவன்
கருத்திற் கொண்ட முடிபையுடைத்து; இத்தண் பணை நாடு - இக்
குளிர்ந்த மருத நிலத்தையுடைய நாடு எ-று.