32. சோழன் நலங்கிள்ளி ஆசிரியர் கோவூர் கிழார் இப்பாட்டின்கண், சோழன் நலங்கிள்ளியின் வள்ளன்மையை வியந்து, இத் தண்பணை நாடு அவன் கருதிய முடிபே யுடையதாதலால், அவன் வஞ்சியும் மதுரையும் தருவன்;அவனை நாமெல்லாம் பாடுவோம் வம்மின் என்று பாராட்டுகின்றார்.
| கடும்பி னடுகல நிறையாக நெடுங்கொடிப் பூவா வஞ்சியுந் தருகுவ னொன்றோ வண்ண நீவிய வணங்கிறைப் பணைத்தோள் ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகென | 5. | மாட மதுரையுந் தருகுவ னெல்லாம் | | பாடுகம் வம்மினோ பரிசின் மாக்கள் தொன்னிலக் கிழமை சுட்டி னன்மதி வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த பசுமட் குரூஉத்திரள் போலவவன் | 10. | கொண்ட குடுமித்தித் தண்பணை நாடே. (32) |
திணை: பாடாண்டிணை. துறை: இயன்மொழி. அவனை அவர் பாடியது.
உரை: கடும்பின் அடு கலம் நிறையாக - நம் சுற்றத்தினது அடுகலத்தை நிறைக்கும் பொருட்டு விலையாக; நெடுங் கொடிப் பூவாவஞ்சியும் தருகுவன் - நெடிய துகிற்கொடியினையுடைய பூவாத வஞ்சியையும் தருகுவன்; வண்ணம் நீவிய - நிறமுடைய கலவை பூசப்பட்ட; வணங் கிறைப் பணைத் தோள் ஒண்ணுதல் விறலியர் - வளைந்த சந்தினையுடைய முன் கையினையும் வேய் போன்ற தோளினையும் ஒள்ளிய நுதலினையுமுடைய விறலியர்; பூவிலை பெறுக என - பூவிற்கு விலையாகப் பெறுகவென்று; மாட மதுரையும் தருகுவன் - மாடத்தையுடைய மதுரையையும் தருவன் ஆதலால்; எல்லாம் பாடுகம் வம்மினோ பரிசில் மாக்கள் - யாமெல்லாம் அவனைப் பாடுவோமாக வாரீர், பரிசின் மாக்காள்; தொன்னிலக் கிழமை சுட்டின் - பழைய நிலவுரிமையைக் குறிப்பின்; நன்மதி வேட்கோச் சிறாஅர் - நல்ல அறிவையுடைய குயக்குலத் திளையோர்;தேர்க் கால் வைத்த பசுமண் குரூஉத் திரள் போல - கலம் வனைதற்குத் திகிரிக் கண்ணே வைத்த பச்சை மண்ணாகிய கனத்த திரள் போல; அவன் கொண்ட குடுமித்து - அவன் கருத்திற் கொண்ட முடிபையுடைத்து; இத்தண் பணை நாடு - இக் குளிர்ந்த மருத நிலத்தையுடைய நாடு எ-று. |