| நின்னைப் பாடும் புலவர் நினது மேற்செலவைப் பாட; படையோர் தாதெரு மறுகிற் பாசறை பொலிய - படைக்கலத்தினையுடையோர் தாதாகிய எருப்பொருந்திய மறுகினையுடைய பாசறைக்கண்ணே பொலிவு பெற; புலராப் பச்சிலை இடை யிடுபு தொடுத்த - புலராத பசிய இலையை யிடையிட்டுத் தொடுக்கப்பட்ட; மலரா மாலைப் பந்து கண்டன்ன - மலராத முகையினையுடைய மாலையினது பந்தைக் கண்டாற்போன்ற; ஊன் சோற்றமலை - தசையோடு கூடிய பெருஞ் சோற்றுத் திரளையை; பாண் கடும்பு அருத்தும் - பாண் சுற்றத்தை யூட்டும்; செம்மற்று நின் வெம் முனை இருக்கை - தலைமையை யுடைத்து நினது வெய்ய முனையாகிய இருப்பிடம்; வல்லோன் - தைஇய - கைவல்லோனாற் புனைந்து செய்யப்பட்ட; வரி வனப்புற்ற - எழுதிய அழகு பொருந்திய; அல்லிப் பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப - அல்லிப் பாவை அல்லிய மென்னும் கூத்தையாடும் அழகை யொப்ப; காம இருவரல்லது - அன்பினையுடைய துணைவனும் துணைவியுமாகிய இருவரல்லது; யாமத்து - இடையா மத்தின்கண்; தனி மகன் வழங்காப் பனிமலர்க் காவின் - தனிமகன் வழங்காத குளிர்ந்த மலரையுடைய காவின்கண்; ஒதுக்கு இன் திணி மணல் - இயங்குதற்கினிய செறிந்த மணலையுடைய; புதுப் பூம் பள்ளி வாயில் - புதிய பூவையுடைய சாலையினது வாயிலின்கண்; மாடந் தொறும் மை விடை வீழ்ப்ப - மாடந்தோறும் செம்மறிக் கிடாயைப் படுக்க; நீ ஆங்குக் கொண்ட விழவினும் பல - நீ அவ்விடத்து எடுத்துக் கொண்ட விழவினும் பல எ-று.
நன்னாட் டுள்ளு மென்ற வும்மை, சிறப்பும்மை அல்லிப் பாவை ஆடுவனப்பென்றது. ஆண் கோலமும் பெண்கோலமுமாகிய அவ்விருவரும் ஆடுங் கூத்தை. படையோர் பாசறை பொலிய வென்பதற்குப் படையோரது பாசறை பொலிவு பெற என்றுரைப்பினும் அமையும். பாசிலை மலைய வென்று பாடமோதுவாரு முளர். தனிமகன் வழங்காவென்றது, தனித்து வழங்கின் அப்பொழில் வருத்து மென்பது. களத்துக்கொள் வெண்ணெல் என்பது, களக்கொள் வெண்ணெல்லெனத் தொக்கது முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரு மென்பன வினையெச்சமுற்று. உழுவை பொறிக்கு மாற்றலை யாகலின், பாண்கடும் பருத்தும் நின் வெம்முனை இருக்கை நீ கொண்ட விழவினும் பல செம்மற்றெனக் கூட்டுக. விழ வென்பது சிறுசோற்று விழவினை; வேள்வி யென்றுரைப்பினுமமையும்.
விளக்கம்: கடகம், ஓலையாற் செய்யப்பட்ட கடகப் பெட்டி குளம் - ஏரி குளத்தின் கீழுள்ள வயல்களில் விளையும் நெல்லை வேறிடத்தே யமைத்த களத்தின்கண் தொகுத்து வையும் பதரும் களைந்து நெல்லைப் பிரித்துக்கொள்பவாதலின், குளக்கீழ் விளைந்த களக் கொள் வெண்ணெல் என்றார். ஏழெயிற் கதவம் - ஏழெயில் என்பது சிவகங்கையைச் சார்ந்துள்ள ஏழு பொன்கோட்டை யென்னும் ஊராக இருக்கலாமென அறிஞர் கருதுகின்றனர். இப் பாட்டின்கட் கூறப்படும் பாண்டி நாட்டு மருத வளமும்
|