| அவ்வூர்ப் பகுதியின் இற்றை நிலையும் இக் கருத்தை வலியுறுத்துகின்றன. வஞ்சி பாடுதல், வஞ்சித் துறைப் பாடாண் பாட்டைப் பாடுதல்; அத்திணைக் குரிய துறைகளை விதந்து பாடுதலுமாம். முல்லை யரும்புகளாற் றொடுத்த பூப்பந்து போலச் சோற்றுத் திரளிருந்த தென்பதாம். திரள், திரளை யென வந்தது. வரிவனப்பு, வரையப்படும் அழகு; அதனால் ஈண்டு எழுதிய அழகு எனப்பட்டது. அல்லிய மென்னும் கூத்தானது கண்ணன், கஞ்சன் விடுத்த யானையின் கோட்டை யோசித்தற்காடிய கூத்து எனச் சிலப்பதிகார வுரை கூறுகிறது. அல்லிப்பாவை, ஆணும் பெண்ணுமாய கோலமுடைய பாவை; அலிப் பேடெனச் சிலப்பதிகார வுரைகாரர் கூறுவர். இக் கூத்தாடுவோர் வட்டணையும் அவிநயமு மின்றி எழுதிய வோவியம் போல்வராதலின், வரிவனப் புற்ற அல்லிப் பாவை யாடு வனப்பு என்றார். பள்ளி - சாலை. காம விருவர் வழங்கின் வருத்தம் செய்யாது தனிமகன் வழங்கின் அப்பொழில் வருத்து மென்றது, தனித்தோர்க்குக் காமவுணர்ச்சியை யெழுப்பி வருத்தும் மென்றது, தனித்தோர்க்குக் காமவுணர்ச்சியை யெழுப்பி வருத்தும் என்பதாம். சிறு சோறு, பொருஞ்சோறு என விழாவகை யுண்மையின், சிறு சோற்று விழா வென்றார். 34. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
இவன் சோழன் வேந்தருட் சிறப்புடையவனாவான். சிறுகுடிக்குரிய பண்ணன் என்பவன் மேல் இவன் பாடியுள்ள பாணாற்றுப்படை இத்தொகை நூற்கண் கோக்கப்பட்டுள்ளது. இவனை ஆலத்தூர் கிழார், வெள்ளைக்குடி நாகனார், ஐயூர் முடவனார், எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார், மாறோக்கத்து நப்பசலையார் முதலிய பல சான்றோர் பாராட்டிப் பாடியிருக்கின்றனர். இவன் ஒருகால் கருவூரை முற்றுகை யிட்டிருந்தானாக, அடைபட்ட வேந்தன் போர்க்கு வாராது அஞ்சிக் கிடப்ப, ஆலத்தூர் கிழார்,அஞ்சிய வேந்தன் அடைபட்டுக் கிடக்க அவனொடு பொருதல் நின் பெருமைக்குப் பொருந்தா தெனச் சொல்லிப் பாடினர். இவன் பகைவர் நாட்டினை யழிப்பது கண்ட மாறோக்கத்து நப்பசலையார், புள்ளுறு புன்கண் தீர்த்த சோழன் வழித் தோன்றிய நீ, வேந்தன் நகரத்திருப்பவும் அவனது நல்ல வூரை யழித்தல் அருளற மாகாது என்று தெருட்டினார். இவ்வளவன் ஆவூர் மூலங்கிழாரை நோக்கி, எம்முள்ளீர்? எந் நாட்டீர்? என்று வினவ, எமது நினை வெல்லை சொல்லுதல் வேண்டா; பகைவர் தேயத் திருப்பினும் அது நின்னதே யெனக் கருதிப் பரிசிலர் அனைவரும் நின்னையே நினைப்பர் என்று சொல்லி மகிழ்வித்தார். ஒருகால் கோவூர் கிழார் இவன் பகைவர் நாட்டை யழிக்கும் திறம் கண்டு இவன்பாற் போந்து கொற்றவள்ளை பாடி அருள் மேவியவுள்ள முடையவனாக்கினார். மலையமானோடு பொருத இவ்வளவன் பெருஞ் சினங்கொண்டு அவன் மக்களைப் பற்றிக் கொணர்ந்து யானையின் காலிலிடப் புக்கானாக, அதனை யறிந்த கோவூர் கிழார்,சோழன் குடிவரவும் இளஞ் சிறாரின் இயல்பும் கூறி அவன் செயலைத் தடுத்து மக்களை உய்வித்தார். வெள்ளைக் குடிநாகனார் என்னும் சான்றோர் இவனை கொடைத்திறத்தைப் புலவர் பலரும் பல்லாறாக மகிழ்ந்து பாடியுள்ளனர். இவன் இறந்த பிறகு, மாறோக்கத்து நப்பசலையாரும் ஆடுதுறை மாசாத்தனாரும் ஐயூர் முடவனாரும் இரங்கிப்பாடிய
|