பக்கம் எண் :

100

     

தோளையுடையனாகிய கொழுநன் இறந்துபட்டானாக; அரும்பு அற
வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை முகையில்லையாக வளவியள இதழ் மலர்ந்த
தாமரையையுடைய; நள்ளிரும் பொய்கையும் - நீர் செறிந்த பொய்கையும்;
ஓர் அற்று - தீயும் ஒரு தன்மைத்து; எ - று.


    தில் விழைவின்கண் வந்தது. எமக்குப் பொய்கையும் தீயும் ஒரு
தன்மைத்து; நுமக்கு அரிதாகுக எனக் கூட்டுக.

    விளக்கம்: பல குணங்களால் நிறைந்தமைந்தவராதலின் “பல
சான்றவிரே” என்றுரைத்தார். பன்மை, அமைந்த குணங்கண்மேனின்றது.
கைம்மை மேற்கொண்டொழுகும் மகளிரை, “உயவற்பெண்டிர்” என்றாள்.
கண்ணகியார், “இன்புறு தங்கணவரிடரெரி யகமூழ்கத் துன்புறுவன நோற்றுத்
துயருறு மகளிரைப்போல், மன்பதை யலர் தூற்ற மன்னவன் தறவிழைப்ப.
அன்பனை யிழந்தேன்யான் அவலங் கொண்டழிவலோ” என்றும், துயருறு
மகளிரை, “துறைபல திறமூழ்கித் துயருறு மகளி” ரென்றும், “கைம்மைகூர்
துறைமூழ்குங் கவலைய மகளி” ரென்றும் இகழ்ந்து கூறுதல் (சிலப். 18:34-51)
காண்க. சுடுகாட்டை முதுகாடென்றலும் பெருங்காடென்றலும் வழக்கு.
அற்றென்பதனைப் பொய்கைக்கும் தீக்கும் தனித்தனி கூட்டி முடிக்க -
ஆனந்தம், சாக்காடு; பையுள் - அது காரணமாகப் பிறக்கும் துன்பம்.

---

247. பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு

     பூதபாண்டியன் இறந்தபோது அவன் தேவி தீப்புகுந்தாளாக,
ஆங்கிருந்த சான்றோர்களுள் மதுரைப் பேராலவாயாரென்னும் சான்றோரும்
ஒருவர். மதுரையில் உள்ள சொக்கப்பெருமான் திருக்கோயிலுக்கு ஆலவாய்
என்பது பெயர். அதனால் அங்கே எழுந்தருளியுள்ள இறைவனை
ஆலவாயார் என்பதும் வழக்கம். அந்தத் திருப்பெயரே இந்தச்
சான்றோருக்கும் பெற்றோரால் இடப்பட்டடுளது. சான்றோராகிய
பேராலவாயார், மதுரையை, “மலைபுரை நெடுநகர்க் கூடல்” என்றும்,
பாண்டியனை “பேரிசைக் கொற்கைப் பொருநன், வென்வேல், கடும்
பகட்டியானை நெடுந்தேர்ச்செழியன்” என்றும் பாராட்டிப் பாடியுள்ளார்.
இவர் பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப்புகுந்ததை நேரிற்
கண்டவர். அக் காட்சி அவர் நெஞ்சில் நன்கு பதிந்திருந்தது அதனை
அவர் இந்த அழகிய பாட்டின்கண் பெருங்கோப்பெண்டு தீப்பாய்ந்தவிடம்,
காட்டிடத்தே காடுகிழாள் கோயிலுக்கு முன்பாகும். கோயில் திருமுன்
அரசமாதேவி தீப்புகுதற்குத் தீ மூட்டப் பட்டிருந்தது; தீ நன்கு எரியத்
தொடங்கியதும், அவள் நீராடிக் கூந்தலைப் பிழிந்துகொண்டு புறங்காட்டை
நோக்கி வந்தாள். தன் பெருமனைக்கண் கணவனாகிய பூதபாண்டியன் சிறிது
போது பிரியினும் பிரிவாற்றாது வருந்தும் இயல்பினளாகிய அவள்
“தனித்துப் புறங்காடு நோக்கி நடந்தது காண்பார்க்கு மிக்க வருத்தத்தைத்
தந்தது. புறங்காட்டில் காடுகிழாள் கோயில் திரு முன்றிலில்
எரிந்துகொண்டிருந்த தீயை, நீர் துளிக்கும் கூந்தல் முதுகிடத்தே
கிடைந்தசையக் கண்களில் நீர் பெருகிச் சொரிய வலம் வந்தாள்; பின்பு
தீயுட்குளித்து மாண்டாள்,” என்று இசைத்துள்ளார்.