265. சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் காட்டு நாட்டு ஊர்களுள் வல்லாரென்பது ஒன்று. அவ்வூர்க்குத் தலைவனான பண்ணன் என்பவன் வாள் வன்மையும் கை வண்மையும் உடையவன். அவனைப் பாடிச் சிறப்பெய்தியவர் சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார். பண்ணன் கரந்தைப் போர் செய்து மாண்டான். நிரை மீட்டுத்தந்து புகழ்கொண்டதுபற்றிக் கோவலர் அவனுக்கு நடுகல் நாட்டிச் சிறப்புச் செய்தனர். அக்காலையிற் சிறுகருந்தும்பியாரும் வந்திருந்தார். அவர்க்கு அவனது நடுகல்லைக் காணவே மிக்க வருத்தமுண்டாயிற்று. அவனுடைய கைவண்மையால் பாணர் முதலிய இரவலர் இனிது வாழ்ந்து வந்தனர்; அவனுடைய வாள் வன்மையால் முடிவேந்தரும் குறுநில வேந்தரும் வென்றி மேம்பட்டனர். பண்ணன் நடுகல்லானமையால், இருதிறத்தாரும் பெரு வருத்தமெய்துவது கண்டார். கையறவு பெரிதாகவே இக்கையறுநிலைப் பாட்டைப் பாடினார்.
| ஊர்நனி யிறந்த பார்முதிர் பறந்தலை ஓங்குநிலை வேங்கை யொள்ளிணர் நறுவீப் போந்தையந் தோட்டிற் புனைந்தனர் தொடுத்துப் பல்லான் கோவலர் படலை சூட்டக் | 5 | கல்லா யினையே கடுமான் றோன்றல் | | வானேறு புரையுநின் றாணிழல் வாழ்க்கைப் பரிசிலர் செல்வ மன்றியும் விரிதார்க் கடும்பகட் டியானை வேந்தர் ஒடுங்கா வென்றியு நின்னொடு செலவே. |
திணையும் துறையு மவை...சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் பாடியது.
உரை: ஊர் நனி இறந்த - ஊரை மிகவும் கடந்த; பார்முதிர் பறந்தலை- முரம்பு நிலமாகிய முதிர்ந்த பறந்தலையிடத்து; ஓங்கு நிலை வேங்கை ஒள்ளிணர் நறுவீ - உயர்ந்த நிலையையுடைய வேங்கையினது ஒள்ளிய கொத்தாகிய நறிய பூவை; போந்தையந் தோட்டிற் புனைந்தனர் தொடுத்து - பனையோலையால் அலங்கரித்துத் தொடுத்து; பல்லான் கோவலர் படலை சூட்ட - பல ஆக்களையுடைய கோவலரானவர்கள் இலை மாலைகளைச் சூட்டி வழிபட; கல்லாயினை - கல்லிலே நின்றாய்; கடுமான் தோன்றல் - விரைந்த குதிரைகளையுடைய தலைவனே; வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கை - மழையிடத்துத் தோன்றும் இடியேறு போன்ற நின்னுடைய தாணிழற்கண் வாழும் வாழ்க்கையையுடைய; கடும்பகட்டு யானை வேந்தர் ஒடுங்காவென்றியும் - விரைந்த செலவையுடைய |