பக்கம் எண் :

177

     

அவன் உடம்பருகே வந்து மார்பிற் புண்ணிருக்கக் கண்டு முகம் மலர்ந்து
தழீஇக்கொண்டாள். பருந்துகள் அவள் அணுகி முயங்குதற்கு எளிதில்
இடந்தராது மொய்த்தன. இக் காட்சி கழாத்தலையார் உள்ளத்தை
யுருக்கிற்று. அதனை உருப்பித்திக் காட்டும் வகையில் இப் பாட்டு
வெளிவருவதாயிற்று.

 மண்கொள வரிந்த வைந்நுதி மருப்பின்
அண்ண னல்லே றிரண்டுடன் மடுத்து
வென்றதன் பச்சை சீவாது போர்த்த
திண்பிணி முரச மிடைப்புலத் திரங்க
5ஆரமர் மயங்கிய ஞாட்பிற் றெறுவர
 நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்
தருகுறை...மன்ற
குருதியொடு துயல்வரு மார்பின்
முயக்கிடை யீயாது மொய்த்தன பருந்தே.

   திணை: தும்பை, துறை: மூதின்முல்லை; கழாத்தலையார் பாடியது.

     உரை: மண்கொள வரிந்த வைந்நுதி மருப்பின் - மண்ணைக் குத்திக்
கொள்ளுவதால் வரி வரியாகக் கீறப்பட்ட மிக்க கூரிய கோட்டினையுடைய;
அண்ணல் நல்லேறு இரண்டுடன் மடுத்து - பெருமை பொருந்திய நல்ல
ஆனேறு இரண்டினைத் தம்முட் போர் செய்ய விடுத்து; வென்றதன் பச்சை
சீவாது போர்க்கப்பட்ட; திண் பிணி முரசம் இடைப் புலத்து இரங்க -
திண்ணிதாய்க் கட்டப்பட்ட போர்முரசு போர்க்களத்தின் நடுவிடத்தே
முழங்க; ஆரமர் மயங்கிய ஞாட்பில் - தடுத்தற்கரிய போர் நிகழ்ந்த
போர்க்களத்தின்கண்; தெறுவர - வெகுட்சி தோன்ற; நெடுவேல் பாய்ந்த
நாணுடை நெஞ்சத்து - மாற்றாரெறிந்த நெடிய வேல் வந்து பாய்ந்ததனால்
நாணமுண்டாகிய நெஞ்சுடனே; அரு குறை... ; மன்ற - நிச்சயமாக;
குருதியொடு துயல் வரும் மார்பின் - குருதி சோர்வ தனோடசையும்
மார்பினை; முயக்கு இடை ஈயாது பருந்து மொய்த்தன - தழுவுதற்
கிடந்தராது பருந்துகள் மொய்த்தன, காண்; எ - று.


     மண்ணைக் குத்திக் கோட்டில் மண் கொள்ளுங்கால் ஆனேற்றின்
கொம்பு கீற்றுக்களாக அறுப்புண்டல் இயல்பாதல்பற்றி, ‘மண்கொள வரிந்த
மருப்பு’ என்றார். முரசுக்குத் தோலை மயிர் சீவாது போர்த்தல் மரபு.
இடைப்புலம், இடைச்சுரம் என்றாற் போலப் பின் முன்னாகத் தொக்கது.
ஞாட்பு, போர் நிகழும் களம். தோலைக் கைக்கொண்டிருந்தும் முன்னறிந்து
தடாது வேலேறுண்டதற்கு நாணுதலின் “நாணுடை செஞ்சத்” தென்றார்;இது
சால்பு முல்லை. வீழ்ந்த மறவன் மனையோள் அவன் மார்பைத் தழீஇக்
கொண்டாளென்பதுபடக் கூறுதலில், இது மூதின் முல்லைத் துறை ஆயிற்று.