பக்கம் எண் :

179

     
 கேட்டியோ வாழி பாண பாசறைப்
பூக்கோ ளின்றேன் றறையும்
10மடிவாய்த் தண்ணுமை யிழிசினன் குரலே.
 ..............கழாத்தலையார் பாடியது.

     உரை: ஈரச் செவ்வி உதவினவாயினும் - ஈரமாகிய பருவம்
கழிவதன்முன் உழுதற்கு உதவிசெய்தனவெனினும்; பல்லெருத்துள்ளும்
நல்லெருது நோக்கி - பலவாகிய எருதுகளுள்ளும் நல்ல எருதுகளையே
தேர்ந்து கொள்வானாய்; வீறு வீறாயும் உழவன் போல - வேறு வேறாக
வைத்து ஆராய்ந்து தேரும் உழவனைப்போல; பீடு பெறு தொல் குடிப்பாடு
பல தாங்கிய மூதிலாளருள்ளும் - பெருமை பெற்ற பழைமையான குடியில்
பிறந்தாரிடத்து    வழிவழிடிப்பட்டுவரும்    நற்பண்புகளனைத்தையும்
சோர்வுபடாது   காத்துவரும்   முதுகுடி   மறவருள்ளும்;   காதலின் -
தன்பாலுள்ள அன்பால்; தனக்கு  முகந்தேந்திய  பசும்பொன் மண்டை -
தனக்காக முகந்தெடுத்துத் தந்த பசும் பொன்னாலாகிய மண்டையிலுள்ள
கள்ளை; இவற்கு ஈக என்னுமது - தன்னருகேயுள்ள இவனைக்  காட்டி
இவ்  வீரனுக்கு நல்குவாயாக வெனச் சொல்லிச் செய்யும் அச் சிறப்பை;
அன்றி சின்- மனங்கொண்டு வியத்தலை யொழி; பாண-பாணனே; பாசறை
- பாசறையிடத்தே; பூக்கோள் இன்று என்று அறையும் - போர்க்குரிய
மறவர்க்குப்  போர்ப்பூவைத்  தரும்  பொழுது  இப்போழுது  என்று
தெரிவியாநிற்கும்;   இழிசினன்   மடிவாய்த்   தண்ணுமை   குரல்
கேட்டி - புலையன் இசைக்கும் தோலை மடித்துப் போர்த்த
வாயையுடைய தண்ணுமையின் ஓசையைக் கேட்பாயாக; எ - று.


     நல்லெருது ஆயும் உழவன் போல வேந்தன் இவனை ஆய்ந்து
தேர்ந்து தனக்கு முகந்தேந்திய மண்டையை இவற்கீக என்னுமது
அன்றிசின்;பாண, தண்ணுமைக்  குரலைக்  கேட்டி  என  
வினைமுடிவு செய்க.அவனைத் தேர்ந்துகொண்டிதற்குக்  காரணம்
கூறுவார்,  “காதலின்”  என்றும், சிறந்தார்க்கன்றிப்  பிறர்க்குக் 
கொடுக்கப்படாதென்றற்குப் ”பசும்பொன் மண்டை” என்றும் கூறினார்.
அதுவும் என்புழி உம்மை, சிறப்பு. அன்றுதல், மறுத்தல்;“அன்றி நின்ற
அவுணர்”  (ஞானசம். 29, 7) என்று சான்றோர் வழங்குதல் காண்க. சின்:
முன்னிலையசை. தன்னை வற்புறுத்தாமை வேண்டிப் பாணனை  வேறுபட
அழைத்துப் பூக்கோளேய தண்ணுமைக்  குரலைக் கேட்பித்தான் என அறிக.
கள்ளினும் பூக்கோளைச் சிறப்புற நோக்குதலும், தன் முன்னே தான் பெறும்
சிறப்புக்கு நாணுதலும், தொல் குடிப்பாடு.

     விளக்கம்: உழவுவினை வென்றியுற முடிதற்கு உழவன் நல்லெருது
தேர்ந்து கோடல்போல, வேந்தனும் வினைக்குரியாரை ஆராய்ந்து
தேர்ந்துகோடல் இன்றியமையாதாகலின், “வீறு வீறாயும் உழவன் போல”
என்றார்; அரசன் வினைக்குரியாரைத் தேர்ந்துகொள்ளும் முறையைத்
திருவள்ளுவர்,