பக்கம் எண் :

194

     
 பெருநீர் மேவற் றண்ணடை யெருமை
இருமருப் புறழு நெடுமா ணெற்றின்
பைம்பய றுதிர்த்த கோதின் கோலணைக்
கன்றுடை மரையாத் துஞ்சுஞ் சீறூர்க்
5கோளிவண் வேண்டேம் புரவே நாரரி
 நனைமுதிர் சாடி நறவின் வாழ்த்தித்
துறைநணி கெழீஇக் கம்பு ளீனும்
தண்ணடை பெறுதலு முரித்தே வைந்நுதி
நெடுவேல் பாய்ந்த மார்பின்
மடல்வன் போந்தையி னிற்கு மோர்க்கே.

   திணை: வெட்சி; துறை: உண்டாட்டு...

     உரை: பெருநீர் மேவல் தண்ணடை எருமை இருமருப்பு உறமும்-
மிக்க நீரின்கண்  இருத்தலை  விரும்பும்  மருதநிலத்தூர்களில் வாழும்
தண்ணிய நடையினையுடைய  எருமையினது  பெரிய  கொம்பைப்போலும்;
நெடுமாண் நெற்றின் பைம்பயறு உதிர்த்த கோதின் - நெடிய முற்றிய
நெற்றுக்களையுடைய பசிய பயற்றின் பயறு நீக்கப்பட்ட கோதுகளின்;கோல்
அணை - திரட்சியைப் படுக்கையாகக் கொண்டு, கன்றுடை மரையா துஞ்சும்
- கன்றையுடைய மரையான் கிடக்கும்; சீறூர் புரவு கோள் இவண்
வேண்டேம் - சிறிய ஊர்களைப் புரவாகக் கொள்வதை இவ்விடத்து
வேண்டேம்; நாரரி நனைமுதிர்சாடி நறவின் வாழ்த்தி - நாரால் வடிக்கப்
பட்டுப் பூக்களையிட்டு முதிர்வித்த சாடியிலுள்ள  கள்ளை  வாழ்த்தி; 
துறைநணி கெழீஇக் கம்புள் ஈனும் நீர்த்துறையிலிருக்கும் புதல்களைப்  
பொருந்திக்   கம்புட்கோழி முட்டைகளையீனும்; தண்ணடை பெறுதலும்
உரித்து - மருத நிலத்தூர்களைப் பெற்றால் பெறுவது உரியதாம்; வைந்நுதி
நெடுவேல் பாய்ந்த மார்பின் - மிகக்கூரிய நெடிய வேல் தைத்து நிற்கும்
மார்புடனே; மடல்வன் போந்தையின் நிற்குமோர்க்கு - மடல் நிறைந்த
வலிய பனைமரம்போல் நிற்கும் போர் வீரர்க்கு; எ - று.


     நிற்கு மோர்க்குத் தண்ணடை பெறுதலும் உரித்து; சீறூர்ப்புரவு
கோள் வாழ்த்தி இவண் வேண்டேம் என வினைமுடிவு செய்க. தரப்
படுவதொன்றை வேண்டாவென விலக்குமிடத்து நறவினை வாழ்த்துவது
பண்டைப் போர்மறவர் மரபு. மரை ஆ - காட்டுப் பசு. பெறுதலும் என்ற
உம்மை பெறாமையும் உரித்தென்பதுபட நிற்றலின் எதிர்மறை; மறப்புகழ்
பெறுதலே இவண் பெரிதும் வேண்டப்படுவது என்பது எஞ்ச நிற்றலின்
எச்சவும்மையுமாம். மறமுடையோர் புகழையல்லது பிற எவற்றையும்
கொள்ளேம் என மறுப்பது சிறப்பு. மடல்வன் போந்தையுவமையால் மறவர்
மார்பில் தைத்த வேலொடு பெற்றாம்.