பக்கம் எண் :

197

     

இவர் பெயரால் இந் நாட்டில் பென்முடி யென்றோர் ஊரும் உளது.
இப்போது இப் பகுதி வெள்ளாத்திரி நாடு என மக்களிடையே
வழங்குகிறது இங்குள்ள முதியோர் “இதனை முன்னோர் பொன்முடி
நல்லூர் என வழங்கின” ரென மொழிகின்றனர். காக்கை பாடினியாராது
ஊரைக் காக்கை யூரெனச் சேரநாட்டவர் வழங்கக் காண்கின்றோமாதலால்
இவ்வூரைப் பொன்முடியாரதுஊர் எனக் கருதுதற்கு இடமுண்டாகிறது.
ஒருகால் சிற்றரசனொருவற்கும் பெருவேந்தனொருவற்கும்
போருண்டாயிற்று. அப் போரில் பெருவேந்தன் தோற்றோடினான்.
போரியல்பைக் கண்டிருந்த பொன்முடியார் வேந்தர்களின் போர்நலத்தைக்
குதிரைகளின் மறப்பண்பை யெடுத்தோதுமுகத்தால் இப் பாட்டின்கண்
சில சொற்களால் விளங்கக் கூறியுள்ளார். சிற்றரசன் குதிரைகள்
எளியவுணவுண்டு வளர்ந்தன; பேரரசன் குதிரைகள் நெய்பெய்த
உணவுண்டு வளர்ந்தன:  போர்க்களத்தை   யடைந்ததும்   சிற்றரசன்
குதிரைகள் கடலலைகளைப் பிளந்தேகும் தோணி போலப் பகைவர்
படைவரிசைகளைப்போழ்ந்து சென்று போர் உடற்றின; பேரரசன்
குதிரைகள் படையணி கண்டு அஞ்சி முன்செல்லாது முருகன் கோயிலின்
பூப்பால் விலக்குண்ட மகளிர் தலை கவிழ்ந்து ஒதுங்கி நிற்பது
போல ஒதுங்கிப் பின்னிடலாயின என நகையுண்டாகக் கூறுகின்றார்.

 பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்தத ருண்ட வோய்நடைப் புரவி
கடன்மண்டு தோணியிற் படைமுகம் போழ
நெய்ம்மிதி யருந்திய கொய்சுவ லெருந்தின்
5தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
 அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலந்தொடாமகளிரி னிகழ்ந்துநின் றவ்வே.

   திணை: நெச்சி: துறை: குதிரை மறம். பொன்முடியார் பாடியது.

     உரை: பருத்தி வேலிச் சீறூர் மன்னன்-பருத்தியை வேலியாகவுடைய
சிறிய ஊர்க்கு மன்னனுடைய; உழுத்ததர் உண்ட ஓய் நடைப்புரவி -
உழுந்தின் சக்கையைத் தின்று வளர்ந்த தளர்ந்த நடையையுடைய குதிரை;
கடல் மண்டு தோணியின் படைமுகம் போழ - கடல்நீரைப் பிளந்துகொண்டு
செல்லும் தோணிபோலப் பகைவருடைய தானைத்திரளை இட முண்டாகப்
பிளந்து சென்று போரைச் செய்ய; நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல்
எருத்தின் நெய் பெய்து மிதித்தமைத்த உணவையுண்ட ஒழுங்குறக்
கத்திரிக்கப்பட்ட பிடரியினையுடைய;    தண்ணடை   மன்னர்    
தாருடைக்   புரவி மருதநிலத்தூர்களையுடைய பெரு வேந்தர்களின்
தாரணிந்த குதிரைகள்; அணங்குடை முருகன் கோட்டத்து வருத்து
தலையுடைய முருகன் கோயிலில்; கலந்தொடா மகளிரின் புழங்கும்
கலங்ககைத் தொடுதற்கில்லாமல் விலக்குடையராகிய மகளிரைப்போல;
இகழ்ந்து நின்ற போர்க்கஞ்சிப் பின்னிட்டு நின்றொழிந்தன; எ - று.