| திணையும் துறையு மவை. அதியமான் நெடுமான் அஞ்சியுழைச் சென்ற பெருஞ்சித்திரனாரைக் காணாது இது கொண்டு செல்க என்று அவன் பரிசில் கொடுப்பக் கொள்ளாது அவர் சொல்லியது.
உரை: குன்றும் மலையும் பல பின் ஒழிய - குன்றுகளும் மலைகளும் பல பின்னே கழிய; வந்தனென்பரிசில் கொண்டனென் செலற்கு - வந்தேன் யான் பரிசில் கொண்டடேனாய்ப் போதற்கு; என நின்று என் நயந்தருளி - எனச் சொல்லிநின்ற என்னை அன்புற்றருளி; ஈதுகொண்டு ஈங்கனம் செல்க தான் என-இப்பொருளைக் கொண்டு இவ்வாறு போக தான் எனச் சொல்ல; என்னை யாங்கறிந்தனனோ - என்னை எப்பரிசறிந்தான்; தாங்கருங் காவலன் - பகைவரால் தடுத்தற்கரிய வேந்தன; காணாது ஈத்த இப்பொருட்கு-என்னை யழைத்துக் காணாதே தந்த இப் பொருட்கு; யான் ஒர் வாணிகப் பரிசிலன் அல்லேன் - யான் ஓர் ஊதியமே கருதும் பரிசிலன் அல்லேன்; பேணி - விரும்பி; தினையனைத்தாயினும் இனிது- தினைத்துணை யள வாயினும் நன்று; அவர் துணையளவறிந்து நல்கனிர்விடின் - அந்தப்பரசிலரது கல்வி முதலாகிய பொருந்திய எல்லையை யறிந்து கொடுத்து விடின் எ - று.
ஈங்கனம் செல்கவென்றது காணாதே அவன் சொல்லிவிட்ட வார்த்தையை, அவர் துணையளவறிந்து பேணி நல்கினர்விடின், தினையளவாயினும் இனிது எனக்கூட்டி வினைமுடிவு செய்க. யான் தரங்கெடப் பொருள்கொடு போமவனல்லேன்; அவனாயின் இதுவும் கொடுபோவன்; நீ எனக்குத் தரமறிந்து தரவேண்டுமென்பதாம். அவர் துணையனவெனத் தம்மை உலகின் மேலிட்டுக் கூறினார்.
விளக்கம்: வழிச்செலவின்அருமையுணர்த்துவதற்கு குன்றும் மலையும் பல பின்னொழிய என்பது கூறப்பட்டது. நயந்தருளி, யென்றது அன்புமிகவுடைமை யென்ற குற்றங்காட்டி நின்றது. என்னைக் காணுதல் வேண்டா; இவற்றைப் பெற்றுக்கொண்டு செல்லட்டும் என்பதுபட நின்றவாறு தோன்ற, ஈங்கனம் செல்கதான்என்றானாகக்கொள்கின்றார், தன் வரவறிந்ததுணையே பரிசில் நல்கித் தன்னோடு உரையாடாதே செல்க என விடையும்விடுத்ததனால் மதி மருண்டமை தோன்ற, யாங்கறிந்தனனோ என்றார். தாங்கருங்காவலன் என்றது.என்னைக்காணுமளவுதானும் இடைபெறாதவன் என்பதும் சுட்டிநின்றதாயினும், இச்செயலால் பெருஞ்சித்திரனார் தாங்கரிய மனக்கவலை கொண்டு வருந்தினமையுணர்த்தி நிற்பது காண்க. இப்பொருட்கு - இப்பொருளைப் பெற்றுச் செல்லுதற்கு, பெறக்கருதும் ஊதியத்தின்மேல் கருத்துச் செலுத்துவது வணிகர் இயல்பு;அவ்வாறேபயன் பரிசில் மேலே கருத்துச் செலுத்தும்புலவன் என்று கருதினன் போலும் என நினைந்து வருந்துகின்றாராதலால், யான் ஒரு வாணிகப் பரிசிலேனல்லேன் என்றார். தினையனைத்தாயினும் பேணித் துணையளவறிந்து நல்கினர் விடின் என்றது, தமது கோட்பாடு இதுவெனப் பெருஞ்சித்திரனார் குறிப்பதாம். --- |