பக்கம் எண் :

212

     

307.களிற்றுடனிலை.

     ஒரு போர்க்களத்தில் ஒரு வீரன் பகைவர் யானைகளையெறிந்து
தானும் இடம் பெயர்ந்து இனிதியங்காதவாறு  புண்பட்டு நின்றான்.
அந்நிலையினும் தன்னைத் தாக்க வந்த களிற்றைக்கொன்று தன் வேந்தன்
பொருட்டு உயிரை விட்டான். இங்ஙனம் தானெறிந்த களிற்றோடு ஒரு
வீரன் தானும் உடன் வீழ்ந்து  மாண்டானாயின்  அச்செயல் களிற்றுடனிலை
யெனப்படும். தன் பொருட்டு உயிர்கொடுத்த வீரனது வீ்ழ்ச்சியை வேந்தன்
கண்டான். வீழ்ந்த வீரர் பலரும் பெரும் புகழ் நிறுவி வீறுபெறுவது
அவற்குப் பேரின்பம் தந்தது. இக்களத்தில் தானும் பொருது உயிர்
கொடுத்துப் புகழ்பெறுவதினும் சிறந்தது பிறிதொன்றும் இல்லை யெனவும்,
இது புலவர் பாடும் புகழ் விளைக்கும்; அப்புகழ் பெறலரிதெனவும்
எண்ணினான்; எழுச்சி  மிக்குக் கடும்போர்  உடற்றிக் காண்போர்
கையற்றினைய வீழ்ந்து பெருமை பெற்றான். அவன் செயல் இப் பாட்டில்
குறிக்கப்படுகிறது.

 ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
குன்றத் தன்ன களிற்றொடு பட்டோன்
வம்பலன் போலத் தோன்று முதுக்காண்
வேனல் வரியணில் வாலத் தன்ன
5.கான வூகின் கழன்றுகு முதுவீ
 அரியல் வான்குழற் சுரியற் றங்க
நீரும் புல்லும் மீயா துமணர்
யாருமி லொருசிறை முடத்தொடு துறந்த
வாழா வான்பக் டேய்ப்பத் தெறுவர்
10.பேருயிர் கொள்ளு மாதோ வதுகண்டு
 வெஞ்சின யானை வேந்தனு மிக்களத்
தெஞ்சலிற் சிறந்தது பிறிதொன் றில்லெனப்
பண்கொளற் கருமை நோக்கி
நெஞ்சற வீழ்ந்த புரைமை யோனே.

     திணை: தும்பை ; துறை: களிற்றுடனிலை...

     உரை: ஆசா கெந்தை யாண்டுள்ள கொல்லோ - எமக்குப் பற்றாகிய
எம் தலைவன் எவ்விடத்தே யுள்ளானோ; குன்றத் தன்ன களிற்றொடு
பட்டோன் - மலைபோன்ற களிற்றை யெறிந்து அதனோடே அவன் இறந்தான்;
வம்பலன் போலத் தோன்றும் - அயலான்போலத் தோன்றுகின்றாள்;
உதுக்காண் - அங்கே அவனைப் பார்; வேனல் - வேனிற் காலத்தில்; வரி
யணில் வாலத்தன்ன - வரிகளையுடைய அணிலினது வாலைப்போன்ற; கான
ஊகின் கழன்றுகு முதுவீ அரியல் - காட்டிடத்து ஊகம் புல்லினின்றும்
உதிர்ந்த பழைய பூ அரியரியாகத் திரண்டவை; வான் குழல் கரியல் தங்க -
பெரிய தலைமயிரிடத்துச்