பக்கம் எண் :

218

     
 பால்கொண்டு மடுப்பவு முண்ணா னாகலிற்
செறாஅ தோச்சிய சிறுகோ லஞ்சியோ
டுயவொடு வருந்து மனனே யினியே
புகர்நிறங் கொண்ட களிறட் டானான்
 5.முன்னாள் வீழ்ந்த வுரவோர் மகனே
 உன்னிலெ னென்னும் புண்ணொன் றம்பு
மானுளை யன்ன குடுமித்
தோன்மிசைச் கிடந்த புல்லண லோனே.


     திணையும் துறையு மவை. பொன்முடியார் பாடியது.

     உரை: பால்  கொண்டு  மடுப்பவும்  உண்ணானாகலின் -  முன்பு
இளமைக் காலத்தில் வள்ளத்தில் பாலை யேந்திக் கையால் இவனைப் பற்றிக்
கொண்டு வாயில்வைத்து உண்பிக்கவும் உண்ணானாகவே செறா அது ஓச்சிய
சிறுகோல் அஞ்சியொடு - உள்ளத்தே சினவாமல் புறத்தே சினந்தாற்போல்
யான் கையில் கொண்டு ஓங்கிய சிறுகோலுக்கு அஞ்சியுண்டவனான இவன்
பொருட்டு; உயவொடு வருந்தும் மனனே - கவலைக்கொண்டு வருந்துகின்ற
மனமே; இனி - இப்பொழுது; புகழ்நிறங் கொண்ட களிறட்டானான் புள்ளி
பொருந்திய  நுதலையுடைய  யானைகளைக்  கொன்றும்  அமையானாய்;
புண்ணொன்று  அம்பு  உன்னிலென்  என்னும்  -  இடையே  மார்பிற்
புண்ணிடத்துத்தைத்துக்கொண்டு நிற்கும் அம்பைக் காட்டிய வழி யான்
இதனையறியேன் என்ற சொல்லாநிற்கின்றான்; மான் உளை யன்ன குடுமி -
குதிரையின் உளைமயிர்போலும் குடுமியுடனே; தோல் மிசைக் கிடந்த
புல்லணலோன் - கேடகம் கீழ்ப்பட அதன்மேல் வீழ்ந்து கிடக்கும் புல்லிய
தாடியையுடையான்; எ - று.


     மனனே, உரவோர் மகன், களிறட்டானான் கிடந்த புல்லணலோன்,
அம்பு உன்னிலென் என்னும் எனக் கூட்டி வினை முடிவு செய்க. மகன்
வீழ்ந்து கிடந்தமை கண்டு வருந்தும் நெஞ்சிற்குக் கூறுதலின், “உயவொடு
வருந்தும் மனனே” என்றாள். அஞ்சுதல் உடையானை “அஞ்சி” யென்றாள்.
சிறு கோலஞ்சி யென்ற நினைவால் வருந்துகின்றனை; அவன் இப்பொழுது
அம்பு உன்னிலனென்னும்; அதனால் வருந்துதல் ஒழிக என்பதாம்.

     விளக்கம்: பாலை  வள்ளத்திற்   கொண்டு   மகன்   வாயில்
வைத்துண்பித்த காலையில், அவன் விளையர்டு விருப்பால் பசியறியாத
மறுக்கவும்,அவ் விருப்பத்தை மாற்றிப் பசிதீர வுண்டல் வேண்டும் காதலால்
சிறு கோல் கொண்டு அச்சுறுத்தும் தாய்மைப் பண்பை, “பால் கொண்டு
மடுப்பவும் உண்ணானாகலின்: செறாஅ தோச்சிய சிறுகோல்” என்றார்.
தாயின் செயலில் செற்றமின்மை தோன்ற. “செறாஅதோச்சிய”