பக்கம் எண் :

219

     

எனப்பட்டது.  கொல்லுதலுடையானைக்  கொல்லி   யென்பது  போல
அஞ்சுதலுடையானை அஞ்சியெனப் பெயர் கொடுத்தார்.செறாஅச் சிறுகோற்
கஞ்சியவன் இ்ன்று பகைவர் மார்பிலெறிந்த அம்பாகிய வெய்ய கோற்கு
அஞ்சாது “புண்ணொன்றம்பு உன்னிலென் என்னும்”என வியந்து கூறியவாறு.
முன்னாளில் பொருது  வீழ்ந்த   தந்தையரும்   தன்னையரும்   ஆகிய
சான்றோரை
“உரவோர்” என்றாள். “மானுளை யன்ன குடுமிப் புல்லணலோன்”
என்றது பிள்ளைமைச் செவ்வி முற்றவும் நீங்காமை யுணர நின்றது. உன்னிலன்
என்றும் பாடவேறுபாடுண்டு.

311. ஒளவையார்

     பலர்க்கும்  பலவகையிலும்  பேருதவி  புரிந்தொழுகிய  பெருவீர
னொருவன் போரொன்றில் கடுஞ்சமர்புரிந்து மேம்பட்டான். அவன் உதவி
பெற்றவர் பலர் போர்க்களத்தே யிருந்தனர்.அவனைப் பகைவர் திறத்து வீரர்
பலர் தம்முடைய படைகளையெறிந்து தாக்கினர். அவர் அனைவருடைய
படைகளையும் அப்பெருவீரன் தன் ஒரு கேடகத்தையே கெண்டு தடுத்து
வென்றான். கண் சிவந்து தீப்பொறி பறக்கவேறே துணை வேண்டாது அவன்
ஒருவனே   வென்று   மாண்புறும்  சிறப்பைக்  கண்டார்  ஒளவையார்.
அக்காட்சியால் அவர உள்ளத்தே உவகை மிகுந்து இப்பாட்டுருவில்<>வெளிவருவதாயிற்று.

 களர்ப்படு கூவற் றோண்டி நாளும்
புலைத்தி கழீஇய தூவெள் ளறுவை
தாதெரு மறுகின் மாசுண விருந்து
பலர்குறை செய்த மலர்தா ரண்ணற்
 5. கொருவரு மில்லை மாதோ செருவத்துச்
 சிறப்புடைச் செங்கண் புகையவோர்
தோல்கொண்டு மறைக்குஞ் சால்புடை யோனே.

     திணை: அது; துறை: பாண்பாட்டு. ஒளவையார் பாடியது,

     உரை: களர்ப்படு கூவர் தோண்டி - களர்நிலத்துண்டாகிய கூவலைத்
தோண்டி; நாளும் புலத்தி கழீஇய தூவெள்ளறுவை - நாடோறும்
வண்ணாத்தி துவைத்து வெளுத்த தூய வெள்ளிய ஆடை; தாது எரு
மறுகின் மாசுண  இருந்து - எருப்பொடி பரந்த தெருவில் எழும்
அழுக்குப்படிய இருந்து; பலர் குறை செய்த - பலர்க்கும் இன்றியமையாத
செயல்களைச் செய்துதவிய; மலர் தார்  அண்ணற்கு -  பூக்களால்
தொடுக்கப்பட்ட  மாலையை  அணிந்த இத்தலைவனுக்கு;  செருவத்து 
ஒருவரும்  இல்லை -  போர்க்களத்தில் துணையாக ஒருவரும் இல்லை;
சிறப்புடைச் செங்கண் புகைய - சிறப்புடைய கண்கள் சினத்தால் சிவந்து
புகையெழ நோக்கி, ஓர் தோல் கொண்டு மறைக்கும் சால்புடையோன் - தன்
ஒரு கேடகத்தைக் கொண்டே பகைவர் எறியும் படைகளைத் தடுக்கும்
வலியமைதியுடையனாயுள்ளான்; எ - று.