பக்கம் எண் :

225

     

கணவனும் நெடுந்தகையுமாகிய தலைவன்குடியும் தானே, சிறையும் தானே
எனக் கூட்டி வினை முடிவு செய்க. வாணுதல் கணவன் என்ற தற்கேற்பக்
“குடியுமன்னும் தானே” என்றும், முனைக்கு வரம்பாகிய நெடுந்தகை
யென்றதை வலியுறுத்தச் “சிறையும் தானே” என்றும் கூறினார். மன்னும்
உம்மைமயும்  அசைநிலை.  வீரர் தொகை மிகுதியும் மற மிகுதியும்
நிறுத்தப்படும் நிறையழிதற்கேது. விழுமமென்பது விழுமெனக் குறைந்து
நின்றது. பிறாண்டும் இவ்வாறே கொள்க.

     விளக்கம்: மகளிர் தம்முடைய நற்குண் நற்செயல்களால் மாண்புற்ற
விடத்து மனைகள் தாம் பெறுவனநிறைந்து இன்ப வொளி விளங்கப் புகழ்
மேம்படுவது குறித்து, மகளிரை “மனைக்கு விளக்காகிய வாணுதல்” என்று
சிறப்பித்தார். சிறப்புடைய ஆண்மக்களைப் பாடுமிடத்து அவர்
மனைவியரையும் சார்த்திப் பாராட்டுவது சான்றோர் மரபு; அதுபற்றியே
“மனைக்கு விளக்காகிய வாணுதல் கணவன்” என்றார்; “அடங்கிய கொள்கை
ஆறிய கற்பின் தேறிய நல்லிசை வண்டார் கூந்தல் ஒண்டொடிகணவ” (பதிற்.
60) என்றும், “பெண்மை சான்ற பெருமடம் நிலைஇக், கற்பிறை கொண்ட
கமழும் சுடர்நுதல் புரையோள் கணவ” (பதிற். 70) என்றும் சான்றோர்
கூறுவது காண்க. மனைவி மனைக்கு விளக்கமாய்த் திகழ, கணவன் போர்
முனைக்கு விளக்கமமைந்த வரம்பாய் நின்றான் என்றார். நன்மனையாளை
மணந்து புகழ் புரிந்து வாழும் ஒருவன், மனைவாழ்வு மேற்கொள்வது தன்
குடியைச் சீர்பெறத் திகழ்வித்தற்காதலால், அதற்கேற்பக் “குடியுமன்னுந்
தானே” யென்றார். நிற்ப நில்லாது படைச்செருக்கால் மேனோக்கி வந்து
தாக்கும் பகைவர் தானைக்கு முன்னாக நின்று பொருது வெற்றி பெறு
மாற்றால், அத் தானை மேலே செல்லாதவாறு விலக்கிப் பொருதழித்து
நிற்பதனால், “சிறையுந் தானே தன் வேந்தன் விழுமுறினே” என்றார்.

315. அதியமான் நெடுமான் அஞ்சி

     அதியமான் நெடுமான் அஞ்சி பகைவரை வென்ற மேம்பட்டு வாழ்ந்த
காலத்தில் அவன் அவைக்களத்திலிருந்து சிறப்புச் செய்த சான்றோராகிய
ஒளவையார், அவன் வாழ்க்கை நலத்தைச் சான்றோர்க்கு அறிவிப்பாராய்
இப்பாட்டினைப்  பாடியுள்ளார்  இதன்கண்,  “நெடுமான்  அஞ்சி,
மிகவுடையனாயின்  பிறர்க்கீத்து  எஞ்சியதைத்  தான் உண்பான்; தான்
கொடுத்தற்குக் கடமைப்பட்டவர்க்கு அவன் கொடுக்குமளவினும்
இரப்பவர்க்கு மிகுதியாகத் தருவன்; திறனில்லாத மடவரோடும்
உடனிருந்துண்டு மகிழும் எண்மையுடையவன்;   மனையிறைப்பில் செருகிய
தீக்கடைகோல் கடையாதபோது தீத்தோன்றாதவாறு போலத்தன் வலி
தோன்றாதிருப்பதும், கடைந்த வழித் தீயைத் தோற்றுவிப்பது போலப்
போருண்டாகியபோது தன் வலியைத் தோற்றுவிப்பதும், அவன் பண்பு”
என்பதைத் தெளிவித்துள்ளார்,

 உடைய னாயி னுண்ணவும் வல்லன்
கடவர் மீது மிரப்போர்க் கீயும்
மடவர் மகிழ்துணை நெடுமா னஞ்சி
இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்
 5.தோன்றா திருக்கவும் வல்லன் மற்றதன்