| | கான்றுபடு கனையெரி போலத் தோன்றவும் வல்லன்றான் றோன்றுங் காலே. |
தினணயும் துறையு மவை: நெடுமானஞ்சியை ஒளவையார் பாடியது.
உரை: உடையனாயின் உண்ணவும் வல்லன் - மிகவுடையனாயின் பரிசிலர்க்கு ஈந்து எஞ்சியதைத் தான் உண்ணவல்லன்; குறைந்ததாயின் அவர்கட்கீந்து தான் உண்ணாதிருக்கவும் வல்லன்;கடவர்மீதும் இரப்போர்க்கு ஈயும் - தான் தரக் கடன் பட்டவர்க்குக கொடுப்பதைவிட மிகுதியாகத் தன்னை இரப்பவருக்குக் கொடுப்பன்; மடவர் மகிழ் துணை - அறிவில்லாரோடும் உடனிருந்து உண்டு மகிழும் துணைவனாவான், நெடுமான் அஞ்சி -; இல்லிறை செரீஇய ஞெலிகோல் போல - மனையின் இறைப்பில் செருகப்பட்ட தீக்கடை கோலைப் போல; தோன்றாதிருக்கவும் வல்லன் - தன் வலி தோற்றாது ஒடுங்கியிருக்கவும் வல்லன்; அதன் கான்றுபடு கனையெரி போல - அதனைக் கடையவெளிப் படும் மிக்க தீயைப்போல;தோன்றுங்கால் - தன் வலிதோற்ற வேண்டு மிடத்து; தோன்றவும் வல்லன் - பலரும் அறியத் தோற்றுவிக்கவும் வல்லனாவான்; எ - று.
எதிர்மறை யும்மையால் உண்ணாமையும் உண்ணல் உண்ணாமைகட் கேற்பப் பெரிதுடைமையும் சிறிதுடைமையும் வருவிக்கப்பட்டன. கடவர், தன்னால் தரப்படும் கடனுடைய தானைவீரர் முதலியோர். இரப்போர், இன்மையால் துன்புறுதலின் அவர்கட்குக் கடவரினும் மேற்படத் தருதலை மேற்கொண்டான். அஞ்சியின் கைவண்மையும் கொடை மடமும் விளங்க மடவர் மகிழ்துணை யென்றார். பெரு வலி படைத்தவனாயினும் அடக்கங் கண்டு வலியிலனெனப் பகைவர் கருதி எள்ளாமை குறித்து, தோன்றுங்கால் தோன்றவும் வல்லன் எனவும் கூறினார். அஞ்சி, வல்லன். ஈயும், மகி்ழ்துணை. தோன்றாதிருக்கவும் வல்லன், தோன்றவும் வல்லன் எனக் கூட்டி வினை முடிவு செய்க.
விளக்கம்: உடையன் எனப் பொதுப்படக் கூறவே, மிக்க பொருளுடைமை கொள்ளப்பட்டது. பிறரை யுண்பித்தலிலே பேரீடுபாடு உடைய அஞ்சி அவருண்டு மகிழ்ந்து பாடக்கண்டு நுகரும் இன்பத்தி்லே திளைக்கின்றவனாதலால், தானே தனித்துண்ணும் இன்பமில் செயலை விரும்புதல் மிக்க வன்மையாற் செய்ய வேண்டுவதுபற்றி, உண்ணவும் வல்லன் என்றார். தானைவீரர், முதலாயினோர்க்குத் தலைவராயினோர் அவ்வக் காலங்களில் மிக்க சிறப்புக்களை நல்குவது கடனாகும். அவ்வகையில் அவர்கள் கடவர் எனப்படுகின்றனர். அக் கடவரினும் இரப்பேர்க்கு மிக அளிப்பது ஆண்மைச் சிறப்பாகும். இன்மையால் இளிவந்து இரப்பவர், யாதும் இரக்கமின்றிச் செய்யும் துணிவுடைய ராதலின், கடவரினும் மிகுதியாக ஈவது பெதற்குரிய ரென்பதுபற்றி, கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும் என்றார் என்று கொள்ளினு மமையும். கடவர்க்கும் அது மிக்க இன்பத்தைச் செய்வதொன்று. மடவர், இளையருமாம். தீக்கோல் கடையப்பட்ட வழிப் பிறக்கும் தீயை, கான்றுபடு கனையெரி யென்றது, அஞ்சியின் சினப் போர்த்திறத்தை விளக்கிற்று. |