அத்தலைவன் வேந்தன்பால் பெற்றுவரும் பெருஞ் செல்வத்தைத் தன்பால் வரும் பரிசிலர்க்கும் இரவலர்க்கும் வரையாது வழங்கும் வண்மையுடையவ னென்றும், அதனால் அவன் பாட்டும் உரையும் பெற்ற பண்புடைய வேட்டுவர் மனையில் நிகழும் நிகழ்ச்சியொன்றைச் சொல்லோவியம் செய்து காட்டுகின்றார். அது படிப்போர் தம் மனக்கண்ணிற் கண்டு மகிழ்தற்குரியதாகும்.
| முன்றின் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப் பந்தர் வேண்டாப் பலாத் தூங்கு நீழற் கைம்மான் வேட்டுவன் கனைதுயின் மடிந்தெனப் பார்வை மடப்பிணை தழீஇப் பிறிதோர் | 5. | தீர்தொழிற் றனிக்கலை திளைத்துவினை யாட | | இன்புறு புணர்நிலை கண்ட மனையோள் கணவ னெழுதலு மஞ்சிக் கலையே பிணைவயிற் றீர்தலு மஞ்சி யாவதும் இல்வழங் காமையிற் கல்லென வொலித்து | 10. | மானதட் பெய்த வுணங்குதினை வல்சி | | கானக் கோழியொ டிதல்கவர்ந் துண்டென ஆர நெருப்பி னார னாறத் தடிவார்ந் திட்ட முழுவள் ளூரம் இரும்பே ரொக்கலொ டொருங்கினி தருந்தித் | 15. | தங்கினை சென்மோ பாண தங்காது | | வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க் கென்றும் அருகா தீயும் வண்மை உரைசா னெடுந்தகை யோம்பு மூரே. |
திணையும் துறையு மவை. வீரை வெளியனார் பாடியது.
உரை: முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி - முன்னைக் கொடியும் முசுண்டைக் கொடியும் செறிந்திருத்தலால்; பந்தர் வேண்டா பலாத் தூங்கு நீழல் - வேறே பந்தல் வேண்டாது தாமே பந்தலாய்ப் பலவின் கனி தொங்கும் நீழவில்; கைம்மாள் வேட்டுவன் கனை துயில் மடிந்தென - யானை வேட்டம் புரியும் வேட்டுவன் மிக்க வுறக்கத்தைக் கொண்டானாக; பார்வை மடப்பிணை தழீஇ - பார்வையாகிய இளைய பெண்மானைத் தழுவி; பிறிதோர் தீர்தொழில் தனிக்கலை திளைத்து விளையாட - தொழி லொன்றுமில்லாத பிறிதொரு தனி ஆண்மான் கலந்து விளையாட உயர; இன்புறு புணர்நிலை கண்ட மனையோள் - இன்பமிக்க அவற்றின் புணர்ச்சி
|