| வரகையுண்டற்கு வரம்பளையில் வாழும் எலி வரமாதலால் அதனைக் கண்டதும் சிறுவர்கள் அதன்மீது அம்பு அய்யும்பொருட்டு ஆரவாரிப்பது இயல்பென்பதுகொண்டு ஆர்ப்பின் என்றும், சிறாரின் ஆர்ப்புக் கேட்டு அஞ்சியோடும் குறுமுயல் கருங்கலங்களினிடையே துள்ளிப்பாய்ந் தோடுங்கால், அவை யுருண்டு தம்மிற்றாக்குண்டு உடைதலால், கருங்கல னுடைய மன்றிற் பாயும் என்றும் கூறினார். வேலோனது பகைமைக்கஞ்சி இரவெல்லாம் உறக்கமிலராயினர் என்பார், கண்படை யீயா வேலோன் என்றார்; முரசு முழங்கு நெடுநகரரசு துயியீயாது, மாதிரம் பனிக்கும் மறம் வீங்கு பல்புகழ் (பதிற். 12) என்று பிறரும் கூறுதல் காண்க.
விளக்கம்: ஊழ்கோடு என்றதற்கு முதிர்ந்த கோடு எனவும் கூறுவர். இளமைச் செவ்வியிற்றோன்றி வெளிப்பட்டு நிமிர்ந்திருக்கும் இளங்கோடேகள்ளியின் கவைமுட்டு உவமமாதற் கேற்புடைமையின், ஊழ்கொடென்றதற்கு முளைத்த கோடென வுரை கூறப்பட்டது. அக்கோடு மிக நீளாது குறுகியிருக்கும் என்பது தோன்றக் குண்டைக் கோட்ட குறுமுட் கள்ளி (அகம். 184) என மதுரை மருதனிள நாகனார் கூறுவது காண்க. கள்ளிகள் நிற்கும் வேலியடியைப் பொருந்தியிருந்து எலியின் வரவைச் சிறுவர் பார்த்திருப்பரென்றற்கு, கள்ளிப் பொரியரைப்்பொருந்திக் கருப்பை பார்க்கும் சிறார் என்றார் அரிகால் அரிந்தவழி அடியில் நிலத்தோடு கொருந்தியிருக்கும் தாள். அரிகாலின் அடியில் வளை செய்துகொண்டு எலிகள் வாழுமாதலால், அவற்றை அரிகாற் கருப்பை யெனச் சிறப்பித்தார். சிறுவர்கள், வேட்டுவச் சிறார்கள் என்பது தோன்ற, வில்லெடுத்தார்ப்பின் என்றார். முயல், குறுகிய உருவிற்றாயினும் கண் பெரிதாதல் பற்றிப் பெருங்கட் குறுமுயல் எனப்பட்டது. சிறாராதலால், வில்லை வளைத்து அம்மை யெய்யுமிடத்து ஆரவாரிப்பாராயினர், ஆர்ப்புக் கேட்டு அஞ்சியோடும் குறுமுயல் அருகே மனை முன்றிலில் இருக்கும் மட்கலங்கள் உருண்டுடையமாறு தாவியோடும் என்றார். புன்புல பூர்களில் இத்தகைய காட்சிகள் இக்காலத்தும் உண்டென வறிக. கரும்பின் எந்திரம், கரும்பை ஆட்டும் ஆலை கரும்பரைக்கும் ஆலையில் எழும் ஓசை சிலைப்பது போறலின், சிலைப்பின் என்றார். கரும்பி னெந்திரம் களிற்றெதிர் பீளிற்றும், (ஐங். 55) என்று ஐங்குறு நூறு கூறுவது காண்க. சுவல, கழுத்துமாம். புன்புலத்திலுள்ள ஊரில் வாழ்வோனாயினும் வேலோன், தண்புல நாட்டு வேந்தர்க்கு அச்சம் விளைவிக்கும் விறலுடையனாவன் என மறவனது வல்லாண்மையே கூறியவாறாயிற்று.
323. வல்லாண்முல்லை வல்லாண் முல்லை யென்பது, இல்லும் பதியும் இயல்பும் கூறி, நல்லாண்மையை நலமிகுத்தன்று, என்று புறப்பொருள் வெண்பாமாலை (8:22) கூறுகிறது. இப் புறப் பாட்டுக்களைத் தொகுத்துத் திணையும் துறையும் வகுத்தவர் புறப்பொருள் வெண்பாமாலையை மேற்கொண்டு சென்றிருத்தலின், அதுகொண்டே இவ்விளக்கம் கூறப்பட்டது. இப்பாட்டுப் பெரிதும் சிதைந்து கிடக்கிறது. இதனைப் பாடிய ஆசிரியர் பெயரும் பாடப்பட்ட தலைவன் பெயரும் தெரியாவாறொழிந்தன. ஒரு தலைவனது ஊர் நலமும் அவனுடைய போர் நலமும் எடுத்துக் கூறவந்த ஆசிரியர், பரிசிலர்க்கு அவர் கருதியதைக் கருதியவளவே கொடுக்கவல்ல கொடையும், |