பக்கம் எண் :

245

     

பல்குன்றக்கோட்டத்து ஆலத்தூருமெனப் பல இருத்தலின், ஆலத்தூர்
கிழாரது ஆலத்தூர் இன்னதெனத் துணியமுடியாவிடினும். இவர் சோழ
வேந்தர்களையே பாடியிருத்தலின், இது சோழ நாட்டு ஆலத்தூர்களில்
ஒன்றென்பது தெளிவாம். கருவிழியின் நடுவிட மொழிய ஏனைப்பகுதி
செங்கருமை நிறம் பரந்திருத்தலின் வெருணோக்கு எனப்பட்டது. புலவு
நாறும் வாயென்றவழி, நாற்றத்தின் பொதுத்தன்மை விளங்காமையின்,
“புள்ளூன் தின்ற  புலவு” எனச்  சிறப்பித்தார்.  ஏனை  யிறைச்சியினும்
புள்ளினங்களின்   இறைச்சியே  பெரிதும் தின்னப்படுவ துணர்த்தற்கு
இவ்வாறு கூறினாரென்றுமாம்.  வேட்டுவர்  மக்களாதலால் பிள்ளைப்
பருவத்தே வில்லேந்தி எலிவேட்டம் புரிகின்றனரென  வறிக.  உடை,
உடை யென்னும் வேலமரம்; இதனைக் குடை  வேலென்றலும் வழக்கு.
வெண்மை நிறமுடைமையின் வான் முள் எனப்பட்டது. ஊகம்புல்லைத்
துண்டித்து அதன் நுனியில் முள்ளைச் செருகி, வில்லிடைவைத்து எலியின்
மேல் எய்து விளையாடுவர் வேட்டுவச் சிறாஅர் என்பது கூறிவாறு. வலார்
மலார் எனவும் வளாரெனவும் வழங்கும். இது வலிய மரக் கொம்பாதல்
கண்க. குலாவரல்: வளைதல்; இது குலாவல் எனவும் வரும்; “கொடுந்தொழில்
வல்விற் கொலைஇய கானவர்” (முருகு:194) என வருதல் காண்க. புன்புலந்
தழீஇய சீறூராயினும் ஊரிடத்து வாழுங்குடிகள் மறப்பண்பும் கொடைப்
பண்பும்  ஒருங்குடைய  நற்குடிகள்  என்றற்கு அங்குடிச் சீறூர் எனச்
சிறப்பித்தார். குமிழ், குமிழம் பழம். வெள்ளை, வெள்யாடு. குமிழின்
கொட்டையும்  வெள்யாட்டின்  பிழுக்கையும்  வேறுபாடறப்  பரந்து
கிடக்குமாறு தோன்ற “வெள்ளை பகுவாய் பெயர்த்த வெண்காழ்தாய
வண்காற் பந்தர்” என்று பாடங்கொண்டுரைத்தலுமுண்டு. வேந்தர்க்குத்
துணையாகச் செல்லும் புறத்துறைக்கு (தொல். புறத். 5) நச்சினார்க்கினியர்
இதனை யெடுத்துக் காட்டுவர்.

325. உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

     இளங்கண்ணன் முதுகண்ணன்  என்பவை பண்டையோர் மக்கட்கு
இட்டு  வழங்கிய  பெயர்கள்.  உறையூரில் வாழ்ந்த முதுகண்ணன் என்ப
வருடைய மகனாராதலால்.இச் சாத்தனார், உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
எனப்படுவாராயினர். ஒருவர் மிக்க இளைஞரொருவர்க்குப் பாதுகாப்பாளராய்
இருப்பராயின் அவரை முதுகண் (Guardian) என்பது பழையநாளை வழக்கு.
பன்னிரண்டாம் நூற்றாண்டிலெழுந்த கல்வெட் டொன்று, “வாச்சியன் இரவி  
கூத்தனை முதுகண்ணாகவுடைய இவன் பிராமணி தேவன் நீலியும் இவன்
மகன் கூத்தன்  இரவியும்” (S. I. Ins. Vol IV. No.227) என்று  கூறுகிறது.
இது கொண்டு முது கண்ணன்  சாத்தனாரை  மிக்க  இளையனொருவற்கு
முதுகண்ணாயிருந்து  சிறந்தவராகக்   கருதுதலும்   உண்டு.  ஆனால்
சொற்கிடக்கை அவ்வாறு கோடற்கு  இடந்தருகின்றிலது.  இச் சாத்தனார் சோழன்
நலங்கிள்ளி காலத்தவராகலின் அவனைப் பலபடியும் பாராட்டி நல்லறிவு கொளுத்தி
யுள்ளாரென்பதை முன்னைய இவருடைய பாட்டுக்களால் அறிகின்றோம். இவர்
ஒருகால் போரில் பெற்ற வென்றிமேம்பாட்டால் வாகை சூடி மாண்புற்று வரும்
தலைவனொருவனைக் கண்டார். அவனுடைய வல்லாண்மையால் அவன் பெற்ற
பொருளனைத்தும் பிறர்க்கீத்துப் புகழ் நடுவதில் பெரிதும் பயன்படுவது இவருக்குப்
பெருவியப்பினைப் பயந்தது. அவ் வியப்பின் சொல்வடிவு இப் பாட்டு.