பக்கம் எண் :

250

     

யானைகள் அணிந்த பொன் செய் ஓடைப் பெரும் பரிசிலன் - பொன்னாற்
செய்யப் பட்ட பட்ட முதலியவற்றைப் பெரிய பரிசிலாக
வழங்குபவனாயுள்ளான்; எ - று.

     ஊர் இருக்கையது, மனைவியும் விருப்பினள், கிழவனும் பரிசிலன்
எனக்கூட்டிவினைமுடிவு செய்க. பார் நடை, பழகிய நடை தனக்குரிய
இரையைக்  கவர்தற்  பொருட்டு  மெத்தென்ற  நடை  பயின்றதாகலின்
வெருகின் நடையை, “பார் நடை” யென்றார். வெருகு இருளிற் போந்து
தீங்கு செய்வதுபற்றி  “வெருகாகிய இருட் பகை”  யெனப்பட்டது. புலா
விட்டரற்றுவதாவது, தொண்டைத் தசை இறுகவிடாது திறந்து கூவுவது.
பருத்தியைக்  கொட்டை  நீக்கித்   தூய்மை  செய்யுமிடத்து  மனையின்
சுவரோரங்களிலும் சுவரிலும் தரையிலும் பஞ்சியின் துய் பரந்து கிடப்பதனை
இருந்தபடியே கொட்டை நூற்ற பருத்திப் பெண்டு எழுந்து நின்று புடைத்து
நீக்குமாறு  தோன்றப்  “புடைநள்”  என்றார்.  சிறையைப்  பஞ்சியின்
பிறத்தோலாகவும் கொட்டையும் தூமசியும் செற்றையாகவும் கொண்டு
இவற்றைப் புடைத்து நீக்குவது தோன்றப் புடைந ளென்றாரென்றுமாம். படு,
மடு. மடுக்கரைகளிலும் வயல் திடர்களிலும் வைசெய்து வாழ்வது உடும்பு;
அதனை அவ்விடங்களிலே வேட்டை யாடிக்கொள்ள வேண்டுதலின்,
“படுமடைக் கொண்டு உடும்பு” என்றார்.

     விளக்கம்: மூதின் முல்லையாவது, “அடல்வே லாடவர்க் கன்றியும்
அவ்வில், மடவரன் மகளிர்க்கு மறமிகுத்தன்று” (பு. வெ. மா. 8:21) என வரும்.
மறக்குடி மகளொருத்தியின் மறமாண்பு கூறலுற்ற இவ்வாசிரியர், அவளுடைய
ஊரமைதியும், அவளுடைய செயன் மாண்பும், அவள் கணவனது மறமாண்பும்
அழகுறக் கூறியிருப்பது, தென்பாண்டி நாட்டு விருதுநகர்ப் பகுதிக்குச்
சென்று காண்பார்க்குப் பெருவியப்புத் தருவதாம். இந்நாளிலும் அப்பகுதி
பருத்தி விளைவுக்குச்சீர்த்த இடமாக இருப்பது குறிக்கத்தக்கது. வெருகின்
இருட்பகை, வெருகாகிய இருட்பகை; இன்: அல்வழிக்கண் வந்தது. பார்
நடை, பார்த்து மெல்ல நடக்கும் நடை யென்றுரைத்தலுமுண்டு.
பெடைக்கோழி இருள்வரக் கண்டு, இதன்கண் வெருகு போந்து தன்னை
வருத்து மென்றஞ்சி அரற்றும் எனவும், அக்காலை,  பருத்திப்  பெண்டின்
சிறுதீ  விளக்கால்  இருள் நீங்குதலின் அப்பெடை அவ் விளக்கொளியில்
தன்னருகே தன் காதற் சேவல் இருப்பதறிந்து அச்சந் தணியுமெனவும்
ஊரின் இயல்பு கூறினார். இஃது ஊரின் இயல்பு கூறிற்றாயினும், நாபட்டு
மகளிரது பண்பும் உள்ளுறுத்துரைத்ததாகவும் கொள்ளக்கிடக்கின்றது.
மகளிர், பகை தோன்றியவிடத்து பகைவர் வரவு நினைந்து
ஓலமிடுவரெனவும், இடைநின்று பகையை விலக்கும் மறவர் வென்றி
யெய்தக்கண்டும், அவ்வென்றி மறவரிடையே தம் காதற் கணவன் இருப்பது
கண்டும் உவகை மிகுகின்றனரெனவும் கொள்ளப்படும். இது மகளிர்க்குரிய
பொதுப் பண்பாகலின் வெளிப்படையாகக் கூறப்படாதாயிற்று. விருந்
தோம்பும் நன்மாண்பு வெள்ப்படக் கூறப்பட்டது. சேவற்கோழியின்
கொண்டையும் கழுத்துமயிரும் கவிரின் பூப்போலுமென்பதை, “மனையுறை
கோழி மறனுடைச் சேவற், போர்புரி யெருத்தம் போலக் கஞலிய,
பொங்கழன் முருக்கி னொண்குரல்” (அகம்.277) எனச் சான்றோர் கூறுவது
காண்க.