பக்கம் எண் :

256

     

என்றார். புரவலர்க்குண்டாகும் துன்பம் தன்னாண்மையால் நீங்குமாதலின்,
அதனை ஒரு பொருளாக நோக்காது, இரவலர் இன்மை தீர்ப்பதையே
பெரிதும் நோக்கினான் என்பார், “இரவலர்க் கருகாது ஈயும் வண்மை
நெடுந்தமை” யென்றும், அதனால்  புகழ்  உண்டாதலின்,  “உரைசால்
நெடுந்தகை”  யென்றும்  கூறினார்.  புரவலர்பாலுள்ள  செல்வத்தைக்
கொணர்ந்து இரவலர்க்கு இன்மைதீர வழங்குபவனாதலால், புரலவர்
புன்கண் நோக்கானாயினா னென்றலு மொன்று.

     விளக்கம்: சீறூர்க்கண் சில குடிகளேயுள்ளன வாயினும் அவரனை
வரும் மறக்குடிிற் றோன்றிய மாண்புடைய ரென்றற்கு, நடுகல்லைப் பரவி
நாட்பலியூட்டும் நற்செயலை சிதந்தோதினார். நடுகல்லைப் பரவுவது, தாமும்
நடுகல்லில் நின்ற தம் முன்னோரைப்போல மறந்துறையில் மாண்புகழெய்தும்
மனமுடையராதலை விளக்கிநின்றது. நறை, தூபம்.  இத்தகைய  மறவர்
உறையிடம் பகைவர் அணுகுதற்கரிய தென்பது தோன்ற, “அருமுனை
இருக்கைத்து” என்றும், பாம்புறையும் புற்றுப் பொலப் பகைவர் நெஞ்சில்
அச்சத்தை விளைவிக்கும் ஒளியுடைய தென்றும் கூறினாராம். போர்வல்ல
இளையரைப் பாம்பாகக் கூறுவது மரபு. “ஒள்வாள் புனிற்றான் றரவின்
இளையர்” (அகம். 179) என்பது காணக். புரவலர் புன்கண், புரவலருக்கு
அவர் பகைவரால் விளையும் பகை. அதனை ஒரு பொருளாகக் கருதாமை
தோன்ற, ‘புன்கண்’ என்றும் அதனைத் தன்னாண்மையால் மிக எளிதில்
மாற்றவல்லவனாகலின், “நோக்காது”  என்றும்,  இரவலர்க்  குண்டாகும்
புன்கணைப் பெரிதாகக் கருதி அஃது அற  நீங்குதற்கேற்பக்  குறைவற
நல்கும் வண்மையுடையன் என்றும் கூறினார். வண்மையால்  உறையும்,
புரவலர் புன்கண் நோக்காத வல்லாண்மையால் நெடுந் தகைமையும் சீறூர்த்
தலைவற்குரியவாயின. கல்நட்டுக் கால் கொண்டதற்கு இதனைக் காட்டுவர்
நச்சினார்க்கினியர் (தொல். பிறத். 5).

330. மதுரைக் கணக்காயனார்

     நல்லிசைச் சான்றோருள் மிக்கசிறப்புற்று விளங்கிய நக்கீரனார்க்குத்
தந்தையார் இந்த மதுரைக் கணக்காயனார். இவர் பாண்டிவேந்தன்பால்
பேரன்புடையவர். அவனைப் பசும்பூண் பாண்டியன் என்று கூறுவர். இப்
பாண்டியன் “அறங்க  டைப்பிடித்த  செங்கோலுடன்   அமர்,  மறஞ்
சாய்த்தெழுந்த  வலுனுயர்  திணிதோள், பலர்புகழ்  திருவின் பசும்பூண்
பாண்டியன்” என்று பாராட்டுக் கூறப்படுகின்றான். இவர் இவ்வாறே சேரனை
“ஒன்னார் தேஎம் பாழ்பட நூறும், துன்னருந் துப்பின் வென்வேற்பொறையன்”
என்றும், சோழனை, “பொறாஅர்; வின்பொரக் கழிந்த திண்பிடி யொள்வாள்,
புனிற்றான் றரவின் இளையர் பெருமகன் தொகுபோர்ச் சோழன்” என்றும்
சிறப்பிப்பார். பாண்டியர் பாலுள்ள யானைகள் பலவும் வடவேங்கடத்திற்
பிறந்தவை   யென்றும்,  கொற்கைப்   பெருத்துறைக்கண்   முத்துக்
குளிக்கப்பெறுமென்றும்   இவர்  தம்  பாடல்களிற்   குறித்துள்ளார்.
இவர்பாடியனவாகப் பல பாட்டுக்கள் தொகை நூல்களுள் உள்ளன. இப்
புறப்பாட்டின்கண், சீறூரையுடைய தலைவன் ஒருவனை வியந்து அவன்
வழிவழியாகக் கொடைப்புகழ் பெற்ற குடியிற் பிறந்தவனென்றும், தன்
படையை யழித்து மேல்வரும் பகைவர் படையைக் கடலைத் தாங்கி நிற்கும்
கரைபோல் தாங்கி நிற்கும் கட்டாண்மையுடைனென்றும் அழகுறப்பாடியுள்ளார்.
அவன் பெயர் தெரிந்திலது.