| உரை: கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல் - கல்லையுடைத்துச் செய்த வலிய உவர்நீர் ஊறும் கிணறுகளையும்; வில்லேர் வாழ்க்கைச் சீறூர் மதவலி - வில்லிக்கொண்டு வேட்ட மாடி வாழும் வாழ்க்கையையுமுடைய சீறூக்குரியவனாகிய மிக்க வலியையுடைய தலைவன்; நனி நல்கூர்ந்தனனாயினும் - மிக்க வறுமையுற்றானாயினும்; பனி மிக - குளிர் மிகுதலால்; புல்லென் மாலை சிறுதீ ஞெலியும் கல்லா இடையன் போல - புல்லென்ற மாலைப்போதில் சிறிய தீக்கடை கோலைக் கடைந்து தீயுண்டாக்கும் கல்லாத இடையன்போல; குறிப்பின் இல்லது படைக்கவும் வல்லன் - மனையில் இல்லாததைக் குறிபபாயறிந்து அதனை விரையப் படைத்துக்கொள்ளும் வல்லமையுடையன்; உள்ளது தவச்சிறிதாயினும் - தன்பால் உள்ளது மிகவும் சிறிதாக இருப்பினும், மிகப் பலர் என்னான் - பரிசிலர் மிகப் பலராக உள்ளனரே எனக் கருதி மயங்காமல்; நீள் நெடும் பந்தர் ஊண்முறை யூட்டும் இல் பொலி மகடூஉப் போல - நீண்ட நெடிய பந்தர்க் கீழ் இருத்தி உணவை முறைமுறையாகத் தந்து உண்பிக்கும் இல் வாழ்க்கையில் சிறந்த மகளைப் போல; சிற்சில வரிகையின் அளிக்கவும் வல்லன் - சில சிலவாக அவரவர் வரிசை அறிந்து கொடுக்க வல்லனாவான்; உரிதினின் - வரையாக் கொடைக்குரிய செல்வக்காலத்தில்; காவல் மன்னர் கடை முகத்து உகக்கும் - நாடு காத்தலைச்செய்யும் வேந்தரது பெருமனைின் புறக்கடையில் எறியப்படும்; போகுபலி வெண்சோறு போல - உயர்ந்த பலியாகி வெள்ளிய சோற்றைப்போல; தூவுங்கால் தூவவும் வல்லன் - பலரும் கொள்ளுமாறு தாக்கூடிய செல்வக் காலத்தில் யாவர்க்கும் வரையாது அள்ளி வழங்கவும் வல்லனாவான்; எ - று.
இல்லாப் போழ்தினும், உள்ளது சிறிதாய போழ்தினும் உள்ளது மிகுதியான போழ்தினும் சீறூர் தலைவனது கொடைநலம் அமைந்தவாறு கூறியது. கற்பாறை நிறைந்த நிலத்தில் அப் பாறைகளையுடைத்து அரிது முயன்று தோண்டப்பட்டவிடத்தும் அதன் கண் கூறும் நீரும் நன்னீராகாது உவர் நீராயொழிதலின் கல்லறுத்திற்றிய வல்லுவர்க் கூவல் என்றார். இருள் மயங்கும் அந்திமாலை புல்லென் மாலை யெனப்பட்டது. ஒன்று இல்வழி இதன்பொருட்டு இரங்காது அதனை முயன்று படைத்துக் கொள்வது ஆண்மையுடையார்க் கமைதியாகலின், இல்லது குறிப்பின் படைக்கவும் வல்லன் என்றார். இல்லது குறிப்பின் என்றதற்கு இல்லாத தொன்றனை நல்குமாறு குறித்து இரந்தால் என்றுரைப்பினுமமையும். தன்பால் உள்ளது சிறிதாயின், அதனை இவறுதலின்றி யாவர்க்கும் அவரவர் வரிசைக்குத் தகமுறைப்படுத்தி வழங்குவதனால் கொள்வார்க்கு வருத்தம் பயவாமையின் வரிசையின் அளிக்கவும் வல்லன் என்றார். வரிசையறிதலின் அருமைபற்றி வல்லன் எனல் வேண்டிற்று. மன்னர் தம்முடைய மனைமுன்றிலில் பெருஞ்சோறு சமைத்து நமர் பிறரென்று நோக்காது |