| யாவர்க்கும் வாரி வழங்குவதுபோல இவனும் தன்பால் வருவார்க்கு அது தனக்குச் செல்வக் காலமாயின் அக்காலத்தே தன்னிடத்துள்ள மிக்க பொருளை வாரி வழங்குவன் என்பார், தூவும் வல்லனவன்; தூவுங்காலே என்றார். மதவலி நல்கூர்ந்தனனாயினும் படைக்கவும் வல்லன்; சிறிதாயினும் அளிக்கவும் வல்லன்; உரிதினின் தூவவும் வல்லன் எனக் கூட்டி வினை முடிவு செய்க. செல்வக் காலம் கொடைக்கடன் இறுத்தற்கு உரிய காலமாகலின், அதனை உரிது என்றார்.
விளக்கம்: சீறூர்த் தலைவனது ஊர்வளம் கூறலுற்று, அது நல்ல நீர்வளமில்லதென்றும், அதனால் அங்கு வாழ்பவர் வில்லேந்தி வேட்டம் புரிந்து வாழ்பவனெ்றும் கூறினார். களவேர் வாழ்க்கை (பெரும்பாண். 40) என்றாற்போல வில்லேர் வாழ்க்கை யென்றார். பனிமிக்க வழி, இடையன் தன்பால் உள்ள ஞெலிகோல் கொண்டு இல்லாத சிறு தீயைப் படைத்துக்கொள்வதுபோல, தன்பால் இல்லாத பொருளை விரைந்தீட்டி வழங்கும் தாளாண்மை மிக்கவன் என்பார், இல்லது படைக்கவும் வல்லன் என்றார்; என்றது, இல்லதன் இன்மை கூறியமையான் என்றவாறாம்.படைக்கும் பொருள் சிறிதாயினும், படைக்கும் திறனுடைய ஒருத்தி படைக்கலுறின், ஏற்போர் பலராயினும், அவரது, பன்மையைமனங் கொள்ளாது யாவரும் ஏற்றமையுமாறு படைத்து மேம்படுமாறுபோல், சிற்சில வரிசையில் அளிக்கவும் வல்லன் என்றார். குடநீரட்டுண்ணு மிடுக்கட் பொழுதும், கடனீரற வுண்ணுங்கேளிர் வரினும், கடனீர்மை கையாறாக் கொள்ளு மடமொழி, மாதர் மனைமாட்சி யாள் (நாலடி. 382) என்று பிறரும் கூறுவது காண்க. மன்னர் மனைகளில், எக்காலத்தும் வரவோர் பலர்க்கும் வரையாது சோறு வழங்குவதுமரபு. இடைக் காலத்திலும் இவ்வாறு சோறளித்து வாழ்ந்த செல்வர் பலர் உண்டு. இதனைப் பலியூட்டு என்பது வழக்கம். அது சங்ககாலத்துச் செல்வர் மேற்கொண்டிருந்த பெருந்தொழில் என்பது இதனால் விளக்கமுறும். இல்லாக்காலத்தும் சிறிதுளதாய காலத்தும் நிலவும் வண்மை கூறவே, செல்வக் காலத்துக்கொடை விரித்துரைக்கப்படாதாயிற்று. 332. விரியூர் நக்கனார் விரியூர் என்பது சேரநாட்டு வள்ளுவ நாட்டுலுள்ளதோர் ஊர்.இப்போது மலையாளச் சில்லாவில் இவ் வள்ளுவநாடு ஒரு தாலுகாவாகவுளது. நக்கன் என்பது இச் சான்றோரது இயற் பெயர். இப் பாட்டொன்றொழிய வேறே இவர் பாடின பாட்டுக்கள் கிடைத்தில. சீறூரையுடைய தலைவன் ஒருவனுடைய மறமாண்மைப எடுத்தோதவந்த இவர், அவனது வேலின் செயலைக் கூறிச் சிறப்பித்துள்ளார். இப் பாட்டின்கண், அவனது வேல் பிறருடைய வேல்போல்வதன்று; அது பெருந்தகைமையுடையது; போரில்லாக் காலத்தில் அது புழுதி படிந்து ஒரு மூலையிலோ வீட்டின் கூரையில் செருகப்பட்டோ கிடக்கும்; மங்கல மகளிர் பாடிவர, யாழ் இசைப்ப, நீர்நிலைக்குச் சென்று நீராடி மாலையணிந்து தெருவில் உலாவருவதும் உண்டு; போர் உண்டாகுமாயின் சிறப்புடன் போர்க்களம் நோக்கிச் செல்லும்; அங்கே வேந்தருடைய பெருங்களிறுகளின் முகத்திற் றைத்து உருவிச் செல்லும் என்று வியந்து கூறியுள்ளார். |