பக்கம் எண் :

300

     

     என்றொருவர்    குறுந்தொகையிற்    காணப்படுகின்றார்.    ஆக.
கடையத்திலிருந்து வந்து மதுரையிற்றங்கி வாழ்ந்த கடையத்தார் குடி சிறந்த
நல்லிசைப் புலவரைப் பெற்று மேன்மையுற்று விளங்கினமை தெளிவாகும்.
புண்ணம் புகுத்த போரின்கண், கண்ணீர் சொரிந்த நின்றாரைக் கண்ணம்
புகுத்தாரெனப்  பாடிய   சிறப்பு பற்றி   இவர்  கண்ணம்புகுத்தாரென்று
சான்றோரால் சிறந்தோதப்பட்டனர் போலும் இவரது இயற்பெயர் ஆயத்தனார்
என்பது. மறக்குடி யொன்றில் வளர்ந்த மகளொருத்தி திருமணத்துக்குரிய
செவ்வி முதிர்ந்து சிறந்திருந்தாளாக, அவளை மணத்தாற் பெறல் வேண்டி
வேந்தர் பலர் அவ்வூர்க்கு வந்து போகின்றவராயிருந்தனர். அவளுடைய
தன்னையர் இவள், “புரையரல்லோரை வரையலள்” என்று கொண்டு
மறங்கிளர்ந்து நின்றனர். வேந்தர் மணக்கோளும் தன்னையர் மறமாண்பும்
கண்ட  ஆயத்தனார்  இவள்  மார்பில்  சுணங்கு  பரந்து  வேந்தர்
உள்ளத்தைக்கவர்ந்த கொள்ளுதலால்  மகள்  மறுத்தல்  பொருளாகப்
போருண்டதால் ஒரு தலை; இவ்வூர்க் கிடங்கு ஞாயிலும் இஞ்சியும் போதிய
காவல் வலியில்லன; அதனால் இவ்வூரது நிலை யாதாகுமோ என இரங்கிப்
பாடியுள்ளார்.

 

தூர்ந்த கிடங்கிற் சோர்ந்த ஞாயிற்
சிதைந்த விஞ்சிக் கதுவாய் மூதூர்
யாங்கா வதுதொ றானே தாங்காது
படுமழை யுருமி னிரங்கு முரசிற்

 5. கடுமான் வேந்தர் காலை வந்தெம்
 நெடுநிலை வாயிற் கொட்டுவர் மாதோ
பொருதா தமைகுவ ரல்லா போருழந்
தடுமுரண் முன்பிற் றன்னைய ரேந்திய
வடிவே லெஃகிற் சிவந்த வுண்கண்
 10. தொடிபிறழ் முன்கை யிளையோள்
 அணிநல் லாகத் தரும்பிய சுணங்கே.

     திணையும் துறையுமவை. மதுரைக் கடைக்கண்ணம்புகுத்தா ராயத்தனார்
பாடியது.


     உரை: தூர்ந்த கிடங்கின் - தூர்ந்துபோன அகழியினையும்; சோர்ந்த
ஞாயில் - தளர்ந்த மதிலுறுப்பினையும்; சிதைந்த இஞ்சி - இடிந்த
மதிலையுமுடைய; கதுவாய் மூதூர் - பகைவர் செய்த அழிவால் வடுப்பட்ட
பழை வூர்; தாங்காது யாங்காவது கொல் - போரைத் தாங்காதாகலின்
என்னாகுமோ; படுமழை உருமின் இரங்கு முரசின் - ஒலிக்கின்ற மேகத்தின்
இடிபோல் முழங்கும் முரசினையும்; கடுமான் வேந்தர் - விரைந்து செல்லும்
குதிரைகளைமுடைய வேந்தர்கள்; காலை வந்து எம் நெடு நிலை வாயில்
கொட்குவர் - எம்முடைய நெடிய நிலையையுடைய வாயிலின்கண்
சுற்றித்திரிகின்றனர்; பொருதாதமைகுவரல்லர் - மறுத்த வழி போர்
உடற்றியன்றி அமையார் போல்கின்றனர்; அடு முரண் முன்பின் தன்னையர்
- அடுகின்ற மாறுபாட்டுக் கேதுவாகிய வலியினையுடைய தமையன்மார்;
போர் உழந்து ஏந்திய வடிவேல் எஃகின் - போரை