பக்கம் எண் :

301

     

வென்றியுண்டாகச் செய்து கையில் ஏந்திய வடித்த வேலின் இலைபோல்;
சிவந்த உண்கண் தொடி பிறழ் முன்கை இளையோள் - சிவந்த மை தீட்டிய
கண்களையும் தொடியானது கையின் முன்னும் பின்னுமாக இயங்கும் முன்
கையினையுமுடைய இளமகளது; அணி நல்லாகத்துச் சுணங்கு அரும்பிய -
அழகிய நல்ல மார்பின்கண் சுணங்கு தோன்றிப் பரந்தன வானலான்; எ - று.


     சுணங்கு அரும்பியவாகலின், வேந்தர் கொட்குவர்; அமைகுவரல்லர்.
மூதூர் தாங்காதாகலின் யாங்காவது கொல் என மாறிக் கூட்டி வினைமுடிவு
செய்க. இடந்தோறும் இடிந்து பொலிவின்றி யிருத்தலின் “கதுவாய் மூதூர்”
என்றார். இம் மூத்தூர் வருபடையைத் தாங்காதென்பது சொல்லாமலே
யமையுமாயினும் வேண்டாதே கூறியது “யாங்காவது கொல்” என்பதை
மிகுத்துக் காட்டுதற்கு. வளைகட்கு  முன்னும்  பின்னுமாக  இயங்குதலின்,
“தொடிபிறழ் முன்கை” எனப்பட்டது. சுணங் கரும்பின மையின் மகட்கொடை
வேண்டி   வேந்தார்   வாராதிருத்தலும்,   மகண்  மறுத்தவழிப்போர்
செய்யாதொழிதலும் இலர் என்பார் “நெடுநிலை வாயிற் கொட்குவ” ரென்றும்,
“பொருதா தமைகுவரல்ல” ரென்றும் கூறினார்.

    விளக்கம்: ஞாயில், மதிலினது உறுப்பு. அதனிடத்தேயிருந்து அகத்
தோராகிய வில் மறவர் புறத்தார்மேல் அம்புமாரி பொழிவர். இஞ்சி, மதில்,
கிடங்கு, அகழ். கிடங்கும் ஞாயிலும் இஞ்சியும் சீரிய அரண்களாதலின்,
போர்க்குச் சமைபவர் இவற்றின் வலியறிதல் முதற் கண் செய்ய
வேண்டுவதுபற்றி இவற்றை யெடுத்தோதுகின்றார். குடி வளங்குன்றி
வலியழிந்திருத்தல் “கதுவாய் மூதூர்” என்றதனால் பெறப்படுகிறது.
“எம்நெடுநிலை வாயில்” என்றது, சிதைந்த இஞ்சி சூழ்ந்த எம்மூரின்
நெடுவாயில் வந்து இடவலி முதலிய வலி காணுகின்றனர் என்பதுபட நின்றது.
“கொட்குவர்” என்றது, மகட்கோடற் கண் இருக்கும் பெருவேட்கையினை
யுணர்த்துகிறது. “பொருதாது அமைகுவரல்ல” ரென்றது. இருதிறத்தாருடைய
உட்கோளுமாம். இளையோள் ஆகத்தில் சுணங்கு அரும்பினமையின் வேந்தர்
வேட்டலும். இவளுடைய தன்னையர் போர்க்குரியராதலும் நிகழ்தலின்
அதனை ஏதுவாக்கினர். கண்ணம் புகுத்தார் ஆயத்தனார் என்பன இந்த
ஆசிரியர் பெயராயின.

351, மதுரைப் படைமங்க மன்னியார்

     ஒருகால் ஓரிடத்தே நிகழ்ந்த போரின்கண் தானைத் தலைவனொருவன்
தானேந்திய படை முழுதும்   கெட்டபின்னரும்   பகைவரொடு  பொருது
வென்றியாற் புகழ் நிறுவினானாக, அவனைப் படைமங்க மன்னினான் என்று
சிறப்பித்துப் பாடிய நலங்கருதிச் சான்றோர் இந்த ஆசிரியரைப் படைமங்க
மன்னியார் என்று  வழங்கினர்  போலும்.  இவர்    மதுரையில்  வாழ்ந்த
சான்றோருள் ஒருவர். இவருடைய இயற்பெயர் முதலியன கிடைத்தில. இவர்
வாகை யென்னும் ஊரில் வாழ்ந்த எயினன் என்னும் தலைவனால் சிறப்புற
ஆதரிக்கப்பெற்றவர்.    மறக்குடித்     தலைவன்     மகளொருத்தி
பெண்மைநலங்கனிந்து மணஞ் செய்யும் செவ்வி யெய்தி விளங்கினாளாக,
அவளை மணம்புரிந்து கோடல் குறி்த்து வேந்தர் பலர்