| தெய்வங்கட்கிடும் மடைபோலச் சூட்டிறைச்சியும் புழுக்கலும் வேண்டுமவர் கட்கு இலையிலையாகக் குறையாமல் கொடுத்து; அவிழ் வேண்டுநர்க்கு இடையருளி உண்மோ - சோறுவேண்டி வருபவர்க்கு உரிய இடமளித் துண்பித்து நீயும் உண்பாயாக; நீர்நிலை பெருத்த வார்மணல் அடைகரை நீர்நிலையிடத்தே - பெருகியுள்ள ஒழுகிய மணல் பரந்த கரையின்கண் நிற்கும்; காவுதோறு இழைத்த வெறியயர் களத்து - காக்கள் தோறும் அமைக்கப்பட்ட வெறியாட்டிடங்களில்; இடம்கெடத் தொகுத்த விடையின் - இனி இடமில்லை யென்னுமாறு தொகுத்து நிறுத்தப்பட்ட ஆடுகளைப் போல; மடங்கல் உண்மை - இறத்தல் ஒருதலை; மாயம் அன்று பொய்யன்று; எ - று.
அறவோன் மகனே, செம்மால், பெரும, திருவ, பெருமையோரும் மாய்ந்தனர்; கேண்மதி; உரைத்திசின்; கிழிப்ப, அருகாது அருளி உண்மோ, மடங்கல் உண்மை மாயமோ அன்று என வினைமுடிவு செய்க. பெரு முழக்கம், முழுக்குரல் எனப்பட்டது. செம்மல் செம்மாலென விளியேற்றது. பிறர் கூறுவன பொய்யும் வழுவும் நிறைந்திருப்பினும் உண்மை தேர்ந்து செய்வன செய்தல் வேண்டுதலின், பிறர் கூறிய மொழி தெரியா என்றார். பகற்போது வினைசெய்வதற்கும், இரவுப்போது வினைசெயல் வகையைச் சூழ்தற்கும், உரிவாகலின், ஞாறிற்றெல்லை ஆள்வினைக்குதவி, இரவி னெல்லை வருவது நாடி யுரைத்திசின் என்றார். கலங்கலான கள்ளுண்டு களித்திருக்குமாறு தோன்றச் செங்கண் மகளி ரெனவும் சிறப்புடைய கலங்கலைத்தாராது தேறலைத் தருவது பற்றித் துனித்தாய்போல மகளிரை மகிழ்வுறுத்துகவென்பார், சிறுதுனியளைஇ யுண்மோ எனவும் கூறினார். எமக்கே கலங்கல் தருமோ (புறம், 298) என்பது காண்க. தெய்வங்கட்குத் தேக்கிலைகளில் வைத்து மடை கொடுப்பது போலச் சூட்டிறைச்சியும் புழுக்கலும் தமக்கு இலைகளில் மடைபோலத் தரப் பெறுதலை விழைவார்க்கு அவ்வாறுதருக வேன்பார், அடையரகாது என்றார். தெய்வமடையின் தேக்கிலைக் குவைஇ நும்பை தீர் சுற்றமொடு பலமிகப் பெறுகுவீர் (பெரும்பாண், 104-5) என்று பிறரும் கூறுதல் காண்க. கிழித்தெனற் பாலது கிழிப்பவெனத திரிந்து நின்றது. வெறியயர் களத்தின்கண். விடைவீழ்த்து வழிபடுவராதலின் வெறியயர் களத்து விடங்கெடத் தொகுத்தவிடையின் என்றார்.
விளக்கம்: நிலவுலகு முற்றும் ஒரு தாமாக ஆண்ட வேந்தரும் சென்று மாய்ந்தன ரென்பதனால், இப் பாட்டுடைத் தலைவனும் ஓர் அரசன் என்பது விளங்குகிறது. தமிழகத்தில் தருமபுத்திரனெனப் பெயரிய அரசர் இருந்தனரென்றற்குச் சான்றின்மையின், இவன் சேர நாட்டுநிலத்தலைவருள் ஒருவனாதல் வேண்டும். வடவாரியர் முதற்கண் குடிபுகுந்த தமிழ்ப்பகுதி சேரநாடேயென்பது ஆராய்ச்சியாளர் துணிபு. வடவாரிய வழக்க வொழுக்கங்களையும் மொழி யமைதிகளையும் முழுவதும் மேற்கொண்டு தமது தொன்மைநிலை தெரியாதொழுகும் தமிழ் நிலத்தாருள் சேரநாட்டுக் கேரளர்களே முன்னணியில் நிற்பவர். அதனால் தருமபுத்திரன் என ஒருவன் இருந்தானெனின், அவன் சேரநாட்டவனே என்பது தேற்றம். அசோக மன்னனுடைய கல்வெட்டுக்கள் கேரளரைக் கேரளபுத்திரர் என |