பக்கம் எண் :

357

     

‘படுபிணன் எதிரப் போர் பழித்து, வாண்மடலோச்சி அதரி திரித்த ஆளுகு
கடாவின்’ எனப் பிரித்தோதினான்; இது கேட்கும் வேந்தன் உள்ளத்தில்
உவகை தோன்றி அவன் முகத்தே முறுவலால் வெளிப்படக் கண்டு, அச்
செவ்வி நோக்கித் தான் தடாரியும் ஆகுளியும் இசைத்துக் களம்பாடிய
திறத்தைக் கூறித் “தடக்கைப் புகர்முக முக வைக்கும் வந்திசின் பெரும”
என்று மொழிந்தான். வேந்தன் செய்த போர் நலத்தால் பேற்மகள் விழுக்கும்
வெண்ணிணமும் தின்று குடர்களை மாலையாக அணிந்து உவகை மிகுந்து
போர்க்களத்தே நின் தேர்ப்பின்னே குரவையாடி மகிழ்கின்றாள்; மகிழ்பவள்
யாம் உண்ணவும் தின்னவும் குன்றாத பெருவளத்தைச் செய்தான் பாண்டியன்;
அவன் வானத்து வயங்கும் பன்மீனினும் பல்லாண்டு வாழியர் என
வாழ்த்துகின்றாள். பேய்மகள் தனக்குரிய விழுக்கும் நிணமும் பிணமும்
பெற்றுப் பாடியாடி வாழ்த்துவதுபோல யாமும் களிறும் மாவும் கலமும் தேரும்
பெற்றுப்பாடியாடி மகிழ்ச்சி மிகுமாஞறு செய்வாயாக என வேண்டினான்.
“கூதிர் வேனில்” எனத் தொடங்கும் சூத்திரத்து (தொல். புறத். 17) “தேரோர்
வென்ற கோமான் முன்தேர்க் குரவை” என்பதற்கு இளம்பூரணர் இங்கே
பேய்மகளாடிய பகுதியை எடுத்துக் காட்டுவர்; “ஒன்றிய மரபின் பின்தேர்க்
குரவை” என்றதற்கு இப்பகுதியை எடுத்துக் காட்டுவர் நச்சினார்க்கினியர்
(தொல். புறத். சூ. 21). பிறரும் வென்று களங்கொண்ட வேந்தன் போர்
வென்றதன்பின், பேய்கள் பிணந்தின்று குரவைாடின என்பது காண்க;
(புறத்திரட்டு. 1429.)

372. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

     பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
பகைவரை வென்று களத்தைத் தனாதாகக் கொண்டு அவ்விடத்தே
களவேள்வி செய்தான். அப்போது பகைவருடைய வெட்டுண்ட தலைகளை
அடுப்பாக வைத்துக் கூவிளங்கட்டையை விறகாக இட்டு மண்டை யோட்டை
அகப்பையாகவும் வன்னிக்கொம்பை அதிற் செருகிய கொம்பாகவும் கொண்ட
அகப்பையைக் கொண்டு,உலையிற் பெய்த ஊனும் நிணமும் குடரும் பொங்க,
வேண்மாள் கூழாக்க, அதனை வாலுவன் தேவர்க்குக் காட்டிக் கலயத்திற்
பெய்த நீரை  யாவர்க்கும்  தெளி்து  வேள்வி  செய்தான். விழாவின்கண்
புதுவோர் பார் வருவது போலப்புதியர் பலர் வந்திருந்த வேள்விச் சாலைக்கு
ஆசிரியர்   மாங்குடி   மருதனாரும்   வந்திருந்தார்.  அப்போது  அவர்
பாண்டியனைப்    பாராட்டிப்    புகழ்வாராய்,    போர்க்களம்   பாடும்
பொருநனொருவன் பாசறைக்கண் வேந்தனைக் கொண்டு, களவேள்விசெய்து
சிறக்கும் வேந்தே, யான் என் தடாரிப்பறையைக் கொட்டிக்கொண்டு நின்
புகழைப் பாடிவந்த தெல்லாம் நீ நல்கும் முத்துமாலையைப் பெறலா மென்றே
யாகும் என்று கூறுவதாக இப் பாட்டினைப் பாடியுள்ளார்.

 விசிபிணித் தடாரி விம்மென வொற்றி
ஏத்தி வந்த தெல்லா முழுத்த
இலங்குவா ளவிரொளி வலம்பட மின்னிக்