| செல்வமும் பழியும் சினைவினைப்பாற்பட்டு முதல் வினைகொண்டன - எஞ்சுதல், இவர்க்குப்பின்னும் நிற்றல். தாணிழல் மயங்காதென்பதற்கு நினக்கு ஒரு தீங்கும் வாராமலென்றதாகக் கொள்க.
இனி, “அதனால் அன்னதாதலு மறிவோய்” என்றதற்கு உயர்ந்ததோர் உலகமெய்துவது காரணத்தால் அத்தாயம் அவர்க்கு அப்படியேயுரித்து; அன்னதாதல் நீ யறிவையென முற்றாகவும், அழிந்தோர்க்கு ஏமமாகும் நின் தாணிழலென முற்றாக்கி மயங்காது தெளிந்துநின்று நன்று செய்தல் வேண்டுமென வுரைப்பாருமுளர். “மாவெங் காட்சி யோடு மாறெதிர்ந் தெழுந்தவர்” என்று பாடமோதுவாருமுளர்.
விளக்கம்: வெண்குடை நிழல் செய்யும் நீர்மைத்தாதலின், ஆனுருபைவிரித்து, விளக்குதற்குரிய புகழை வருவித்து, “வெண்கொற்றக் குடையன் உலகத்தை நிழல் செய்து புகழால் விளக்கும் வேந்தே” யென்றார். ஓரினமாய் ஒருகுடியில் தோன்றித்தெளிந்த சூழ்ச்சியில்லாமையால் பகைத்தெழுந்தமையால், புதல்வர்களை “மாறெதிர்பு எழுந்தவர்” என்று ஆசிரியர் கூறியதனால், உரைகாரர், அதற்கு, “்நின்னொடு பகையாய் வேறுபட்டெழுந்த அவ்விருவர்” என்றுரைத்தார். புகழக்கு இடம் இவ்வுலகமாதலால், “நல்லிசையெய்தி” என்றதற்கு, “நல்ல புகழை இவ்வுலகத்துப் பொருந்தி” யென்றார். எண்ணில் காட்சி யென்புழி எண் சூழ்ச்சி மேலும் காட்சி அறிவின் மேலும்நின்றன. அறிவுடையராயினும், சூழுந்திறன் உடையரல்லராதலின் “எண்ணில் காட்சி”, யென்றும், புதல்வ ரென்னாது இளையரென்றது, அஃதிலராதற்கேது அவரது இளமை யென்றும் கூறினாராம். வேந்தனை நோக்கி, “நீ தோற்பின்” எனத் தோல்வி கூறுதலின், அது கேட்டு அவன் மனம் வேறுபடாமைக்கு “அமர்வெஞ் செல்வ” என்றார். மற்றென்பது வினை மாற்றன்றென்பது விளங்க “மற்று, அசை” என்றார். சோழனும் அவன் புதல்வர்களும் “பகைஞராய்” “மாறெதிர்பு எழுந்து” நிற்றலால், “நினைப்பின்” என்றும், “நினையுங்காலை” என்றும் கூறினார். வானோருலகென்புழி, ஓர் என்பதை அசையாக்கி, வானாகிய உலகென ஒட்டாக்காது, வானோரென ஒரு பெயராக்கி, வானோரது உலக மெனவுரைக்க வென்பார், “வானோருலகென்றது ஒட்டன்றி ஒரு பெயராய் நின்ற” தென்றார். செல்வமும் பழியும் எஞ்சுவனவாதலால் அவற்றிற் குரிய எஞ்சுதலாகிய வினையை, “எஞ்சுவை” எனச் சோழனுக்குரிய வினையாகக் கூறினமையின், அதற்கு அமைதி கூறுவார், செல்வமும் பழியும் அவற்றைச் செய்வோர்க்குச் சினையுமுதலும் போல இயைபுறுதலால், “செல்வமும் பழியும் சினைவினைப் பாற்பட்டு முதல்வினை கொண்டன” என்றார். “மாவெங் காட்சியொடு மாறெதிர்ந் தெழுந்தவர்” என்ற பாடத்துக்கு “யானைப்படையால் விரும்பத்தக்க காட்சியோடு மாறுபட்டுப் போர்க்கு எழுந்தவர்கள்” என்று கூறுக. “யானையுடைய படை காண்டல் முன்னினிதே” யென்பவாகலின், “மாவெங்காட்சியொடு” என்றாரெனக் கொள்க. ---
214. கோப்பெருஞ் சோழன் மக்கள் செயலல் மானம் பொறாத கோப்பெருஞ்சோழன் துறவு பூண்டு வடக்கிருந்து உயிர்துறந்து புகழ்நிறுவக் கருதினான். வடக்கிருத்தலாவது, ஊர்ப்புறத்தே தனிணிடங்கண்டு, அறமுரைக்கும் சான்றோர் புடைசூழப் புல்லைப்பரப்பி அதின்மீதிருந்து உண்ணாநோன்பு மேற |