பக்கம் எண் :

387

     

     விளக்கம்: பரிசிற் றுறையாவது, “மண்ணகங் காவன் மன்னன் முன்னர்,
எண்ணிய  பரிசில்  இதுவென  வுரைத்தன்று” (பு.வெ. மா. 9:5)  என வரும்.
இவ்வகையில் உரைக்குமிடத்துத் தானே கூறுதலும்,  பிறர்  கூறியதனைக்
கொண்டெடுத்துக் கூறுதலும் எனப்பல வகை யுண்மையின், இப்பாட்டின்கண்
புறத்திணை நன்னாகனார் கிணைப் பொருநன் கூற்றைக் கொண்டெடுத்து
மொழிவது பரிசில் இதுவென வுரைப்பதாதலின், இப் பாட்டுப் பரிசிற்றுறை
யெனத் துறை கூறப் படுவதாயிற்றென வறிக.வில்லியாதன் நல்கிய பெருவளம்
பெற்ற கிணைவன் “யானே பெறுகவன் தாணிழல் வாழ்க்கை, அவனே பெறுக
வென் நாவிசை” என்பது அவனது உள்ள நிறைவைக் குறிக்குமாயினும், பெற்ற
வளத்தின் சிறப்பியல்பை வெளிப்படுத்தாமையினும், பெற்ற வளத்தின்
சிறப்பியல்பை    வெளிப்படுத்தாமையின்,   அதனையெடுத்து  மொழிந்த 
நன்னாகனார், “குறுந்தாளேற்றை........பசி தீர்த்தல் என” என அவன்
கூறியதனை இறுதிக்கண் உரைத்தார். கொன்னைச்சொல் பெருமையும் (தொல்.
இடை. 6) குறிக்குமாகலின், கொன்வரல் வாழ்க்கை யென்றதற்குப் பெருவளப்
பேற்றால் பெருமிதத்தோடு வரும் வாழ்க்கையை யுடைய கிணைவன் எனினும்
பொருந்தும். மாவிலங்கை யென்பது தென்னார்க்காடு மாவட்டத்தில்
திண்டிவனப் பகுதியில் மேன்மாவிலங்கை யெனவும் கீழ்மாவிலங்கை
யெனவும் இரு கூறுற்று வழங்குகிறது. “நெல்லமல் புரவின் இலங்கை யென்றலின்,
இஃது இன்று போலப் பண்டும் நல்ல நெல்வளம்
பொருந்தியவூராக இருந்திருந்த தென்பது குறிக்கத் தக்கது.

     இப்பகுதியில் ஆதவில்லிக்கூத்தனூர் என்றோர் ஊருமுளது; அதனை
நோக்கின், வில்லியாதனுடைய வழிவந்தோன் ஒருவன் ஆதன் வில்லி யெனப்
பெயர்  கொண்டிருந்து  தன்காலத்துக்  கூத்தன் ஒருவனுக்கு ஆதவில்லிக்
கூத்தன் என்ற சிறப்பளித்து  அப்பெயரால்  ஆத  வில்லிக்  கூத்தனூரை
நல்கினான்  என்பது  தெரிகிறது. சென்ற 1938 முதல்  தமிழ்  நாட்டில்
எடுக்கப்பெற்ற கல்வெட்டுக்களைப்பற்றிய ஆண்டறிக்கை களேனும்
இதுகாறும் வெளியிடப்படாமையால், இதனை மேலும் ஆராய்ந்து
காண்பதற்கு வாய்ப்பில்லை.

380. நாஞ்சில் வள்ளுவன்

     நாஞ்சில்மலைத் தலைவனான இவ்வள்ளுவனை ஒருகால் கருவூர்க்
கதப்பிள்ளை யென்பார் காணச்சென்றார்.கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனா
ரென வேறொரு சான்றோர் இம்தொகை நூலுட் காணப்படுகின்றார். இவர்
இச்சாத்தனார்க்குத் தந்தையெனக் கொள்ளல் தகும். இவர் வள்ளுவனைக்
கண்டபோது, அவன் பெருவந் தந்து இவரைச் சிறப்பித்தான். அக்காலை
இப்பாட்டுப்பாடப் பெற்றது. இதன்கண், “வள்ளுவன் தென்னவனுக்குத்
தானைத் தலைவன்; நாஞ்சில்மலைக்குத் தலைவன்; பகைமையுற்றோர்க்கு
நினைவுக்கெட்டா நெடுஞ்சேய்மையில் உள்ளவன்; நட்புக்கொண்டு தன்பால்
வருவோர்க்கு அங்கையினும் அண்மையிலுள்ளவன்; அத்தகையனாதலால்,
எங்கும் எவர்க்கும் இன்மைத் துன்பம் வந்துவருத்துமாயினும் என் சுற்றத்தார்
அத்துன்ப மின்றி இனிது மகிழ்ந்துள்ளனர்” என்று குறித்துள்ளார். இப் பாட்டு
இடைிடையே சிதைந்துள்ளது. இதனிடையே “வல்வேற்சாத்தன் நல்லிசை”
என்றொரு தொடர் காணப்படுகிறது. அதனை யடுத்து வரும் அடி சிதைந்து
போனமையின்