பக்கம் எண் :

404

     

நெஞ்சழுங்குவது இல்லையாம்;அன்னோனையுடையேம் - அத்தகையவனைத்
தலைவனாகவுடையே  மாதலின்; இனி - இப்பொழுது; வறட்கு -
வறற்காலத்தைச்  செய்தற்பொருட்டு; வெள்ளி யாண்டு நிற்க -வெள்ளியாகிய
மீன் எத்திசைக்கண் நிற்பினும் நிற்பதாக; மாண்டக -மாண்புண்டாகஉண்ட
நன் கலம் பெய்து நுடக்கவும் - உணவுண்ட நல்ல கலங்களில்
உண்ணமாட்டாதொழித்த மிக்கவற்றை அக்கலத்திடையே வைத்து
மடித்தெறியவும்; தின்றநன்பல் ஊஉன் தோண்டவும் - ஊனைத்
தின்றதனால் பற்களின் இடையிலே சிக்கிக்கொண்ட - வூனைத்
தோண்டியெடுக்கவும்; வந்த வைகல்   அல்லது- நிகழ்ந்த  நாட்கள்
உண்டேயன்றி;  சென்ற   எல்லைச் செலவறியேன் - இவ்வகையாக
உண்ணக்கழிந்த நாட்களை எண்ணியறிந்திலேன்;எ - று.

     நீர்வளத்தால் மருதம் மென்பாலென்றும் அவ்வளம் இன்மையால்
முல்லை வன்பாலலென்றும் கூறுப்படும்.உடன் அணைஇ யென்றதனால்
இனமும்கொள்ளப்பட்டது.   வஞ்சி,   வஞ்சிமரம்.  முற்றிய  கரும்பே
யறுக்கப் படுமாகலின், அஃது அறைக்கரும் பெனப்பட்டது. இருப்பைப் பூ
மழைத்துளிபோ லுதிர்வதுபற்றி,  “இருப்பைப்பூ  வுறைக்குந்து”்  என்றார். 
உம்,  உந்தாயிற்று. கருப்பை,  எலி.  குறும்பூழ்  கருப்பையைப் பிடித்தற்கு
முயலுதலைப் பிறரும், “பொறிப்புறப் பூழின் போர்வல்சேவல்-குடந்தையஞ்
செவிய கோட்டெலியாட்ட” (புறம். 321) என்பர். கள்ளுண்பார்க்கு
வியஞ்சனமாக இஞ்சிப் பூ முதலியவற்றை மாலையாகத் தொடுத்துக்
கட்குடத்துக்குக் கட்டுவது பண்டையோர் மரபு. நீர் பெய்தற்கு
வருந்தாமைபோல நெற்பெய்தற்குச் சுருங்காமை தோன்ற “நீர் நாண
நெய் வழங்கி” யென்றார்.  மண்:  ஆகுபெயர்;  மண்ணுலகென்றே
கொண்டு, மண்ணாணுதலாவது  மண்  பரப்புச்சுருங்கப்  புகழ்விரிதல்
என்றலுமொன்று. எங்கள்  தலைவன்  இனிதிருத்தலின், வெள்ளியது 
நிலைகுறித்து  யாம்  உள மழிந்து  நலந்தொலைவது  வேண்டா  என்பார் 
“யாமெவன் தொலைவதை” என்றார்.எவன் என்பது இன்மை குறித்து
நின்றது. வெள்ளியாகிய மீன் கெடுதிசையில் நிற்பினும் எமக்கு
வருத்தமில்லையென்றலின், “யாண்டும் நிற்க” என்பது கூறப்பட்டது.
உணவுன்டற்குப் பரப்பப்படும் இலையும் நன்கலமாதின், நன்கலமெனப்
பட்டது; பிற்காலத்தார் பரிகலம் என்பது இக் குறிப்பேபற்றி வந்தது.
உண்ணப்படாது மிக்கு நின்றவற்றை இ்லையிட வைத்து மடித்துப்
புறத்தே யெறிதலின் “உண்டநன்கலம் பெய்து நுடக்கவும்” என்றும்,
ஒவ்வொரு நாளும் வந்தநாளிற் போல உண்பனவும் தின்பனவும்
ஆரப்பெற்று, இறப்பும் எதிர்வுமாகிய நாட்களை எண்ணாது மகிழும்
திறம் கூறுவார் “வந்த வைகல்லது சென்ற வெல்லைச் செலவறியேனே”
என்றார். எல் - பகல். பெரும, யாம்கிணையோம்; தண்டவும், தண்டான்;
வழங்கி, வேட்டு, புரந்தோன்; எந்தை; தொலைவதை எவன்; அன்னோனை
யுடையேம்; நிற்க, நுடக்கவும் தோண்டவும் வந்த வைகல் அல்லது
எல்லை செலவறியேன் எனக் கூட்டி வினை முடிவு செய்க. என்ப:
அலைநிலை.

     விளக்கம்: இப்பாட்டின்கண்புறத்தினண நன்னாகனார் கரும்பனூர்
கிழானது கரும்பனூரையும், அவனது கொடைநலத்தையும், அந்நலத்தைத்தாம்
நுகர்ந்த சிறப்பையும் விளக்கியுள்ளார். கரும்பனூரின்