பக்கம் எண் :

411

     

செய்தொழிலான் வியர்ப்பறியாமை, ஈத்தோன்” என்று உரைப்பது அறிந்து
இன்புறத்தக்கது. கொடையினை  யேற்றோர்க்கு  இது  விளைவாக,
அக்கொடையினால் வளவற்கு உளதாகிய பயன் இதுவென்பார், “இசை
தனதாக”என்றார். வயல்பூத் ததும்பின்றென் றதனால் மருதவளமும், புறவு
வெங்குறும்பின்று  என்றதனால் முல்லை வளமும், கடல்புன்னைச்
சினையலைக்குந்து என்றதனால் நெய்தல் வளமும்,கழிபெருங்கல் நன்னாட்டு
உமணொலிக்குந்து என்றதனால் குறிஞ்சி  வளமும்  திணை மயக்கமும்
கூறினாராயிற்று. நாட்டின்  நலங்காணுமிடத்துப்பாலை  சிறந்த தன்மையின்
நானிலமே  எடுத்து  மொழிதல்  மரபு. ஆசிரியர் தொல்காப்பியரும்“முல்லை
குறிஞ்சி மருதம் நெய்தலெனச்” (அகத்திணை:5) சொல்லிய முறை காண்க.
புறவு கூறுமிடத்து, “வில்லிருந்த வெங்குறும்பின்” றென்றதனால் பாலையும்
ஓராற்றால் கூறப்பட்டதெனக் கோடலுமொன்று, “பொருநம் யாம்” எனப்
பொதுப் படக் கூறினமையின், பொதுநீ்க்கிச் சிறப்பிப்பார் “பொராஅப்
பொருநரேம்” என்றார், வேண்டியது குறிப்பான் உணர்ந்து நல்கும் வளவன்
பால் இரத்தலும் “ஓர் ஏர் உடைத்” (குறள். 1053) தாதலால், அச்சியப்பால்
“யாண்டுநிற்கவெள்ளி” எனப்பெருமிதம்படப்பேசுகின்றார்.

---
387. சேரமான் சிக்கற்பள்ளித் துங்சிய செல்வக்
கடுங்கோவாழியாதன்

      சோழநாட்டில் சிக்கலென்னு மோருர் இருப்பதுபோலப் பாண்டி
நாட்டிலும்   ஓர்  ஊர்  உளது.  பாண்டி நாட்டுச் சிக்கற்பள்ளியிற்
செல்வக் கடுங்கோ  வாழியாதன் துஞ்சியதுபற்றி அவன்சிக்கற்பள்ளித்
துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் எனப்படுவானாயினன். பதிற்றுப்
பத்தினுள் ஏழாம்பத்தாற் பாடப்பெற்ற   செல்வக்கடுங்கோ   வாழியாதனும்
சிக்கற்பள்ளித் துஞ்சிய வாழியாதனும் ஒருவரேயாவர்.செல்வக் கடுங்கோ
வாழியாதன் சிக்கற்பள்ளிக்கண  துஞ்சியபின் இப்புறப்பாட்டுத் தொகுக்கப்
பட்டமையின். தொகுத்தோர்  இவ்வாறு  குறித்துள்ளனரென அறிக.
பறம்புமலைக் குரியனான வேள்பாரி  யிறந்தபின்  கபிலர்  இச்செல்வக்
கடுங்கோ வாழியாதன், “ஈத்த திரங்கான் ஈத்தொறு மகிழான், ஈத்தொறு
மாவள்ளியன்” என்று சான்றோர் கூறக்கேட்டு  வாழியாதனைச் சென்று  
கேளாத  நல்குபவன். அவனுடைய போர்வன்மையும் கைவண்மையும்
அவனுடைய திருவோலக்கத்திலிருந்து கண்ட கபிலர், அவனை
“பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே, பணியா வுள்ளமோடணிவரக்
கெழீஇ,  நட்டோர்க் கல்லது  கண்ணஞ் சலையே வணங்குசிலை
பொருதநின்   மணங்கம   ழகல,   மகளிர்க் கல்லது மலர்ப் பறிய
யலையே, நிலந்திறம் பெயருங் காலை யாயினும், கிளந்த சொன்னீ
பொய்ப்பறி யலையே” (பதிற். 63) எனவும், “தொலையாக் கொள்கைச்
சுற்றஞ் சுற்ற, வேள்வியிற் கடவுளருத்தினை, கேள்வியின் உயர்நிலை,
யுலகத் தையரின்புறுத்தினை, வணங்கிய சாயல்  வணங்கா  வாண்மை,
இளந்துணைப்  புதல்வரின் முதியர்ப் பேணித், வணங்கா வாண்மை,
இளந்துனணப் புதல்வரின் முதியர்ப் பேணித், தொல்கடனிறுத்த வெல்போ
ரண்ணல்”  (பதிற். 70)  எனவும்  பாராட்டினார். ஒரு முற்றுகையில் இரு
பெருவேந்தரை வென்ற அவனது ஆண்மையும் போர்செய ஆற்றாது
அடிபணியும் பகைவர்பால் அருள் செய்யும் ஊராண்மையும் கபிலராற்
சிறப்பிக்கப்டுகின்றன. இவன் மனைவியார்