| 395. சோழநாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் பிடவூர் எனப் பெரியதோரூர் இதனைச் சோழநாட்டுப் பிடவூர் என்று பண்டையோர் குறித்துள்ளனர். தொண்டைநாட்டுப் பிடவூர், மணவிற் கோட்டத்துப் புரிசைநாட்டுப் பிடவூர் (A. R. No. 68 of 1923) என்றும், சோழநாட்டுப்பிடவூர். பிடவூர் நாட்டுப் பிடவூர் (A. R. No. 139 of 1930-31) என்றும் கல்வெட்டுகளிற் காணப்படுகின்றன. இப்பிடவூர்க்குரியராய் வாழ்ந்த வேளாண் மக்களின் குடி முதல்வன் பிடவூர் கிழானாவன். இவனும் இவனைச் சேர்ந்தோரும் அந்நாளில் வேந்தர்க்கு மண்டிலமாக்களும் தண்டத் தலைவருமாய்த் துணைபுரிந்தனர். மூவேந்தர்க்கு மகட்கொடை நேரும் சிறப்பும் இவர்கட்கு உண்டு. இவர்கள் வேளிரெனப்படுதலுமுண்டு. பிடவூர் வேளிர்குடி வழிவழியாக வந்து இடைக்காலத்தும் சிறந்திருந்தது. கல்வெட்டுகளுள் பிடவூர் நாட்டுப் பிடவூர் வேள் என்பானொருவன் (A. R. No. 139 of 1930-31) காணப்படுவதே இதற்குக் சான்று பகருகின்றது. இது நிற்க. இப் பிடவூர் உறையூர்க்குக் கிழக்கில் உளது. பெருஞ் சாத்தன் இப்பிடவூர் கிழான் மகனாவான். இவன் நொடுங்கை வேண்மால் எனவும் வழங்கப்படுவன். இவன்பால் மதுரைச்சானறோரான நக்கீரனார்க்குப் பேரன்பும் பெருநட்பும் உண்டு. ஒருகால் நக்கீரர் இவனைக் காணச் சென்றபோது, பெருஞ்சாத்தன் அவரை இனிது வரவேற்றுச் சீரிய உணவும் நல்சி மிக்க பெருஞ் செல்வமும் வழங்கிச் சிறப்பித்தான். இவ்வாறு நக்கீரர்க்குப் பெருஞ் சிறப்புக்களைச் செய்தும் இப்பெருஞ்சாத்தன் உள்ளம் அமையானாய், தன் மனைவியை வருவித்து அவட்கு நக்கீரரைக் காட்டி, இவரை என்னபை் போற் போற்றுக என்று பணித்தான். அது கண்டதும் நன்கீரர்க்குப் பெருவியப்புண்டாயிற்று. அக்காலை இப் பாட்டைப் பாடினார். இதன்கண் தம்மை ஒரு கிணைப்பொருநனாக வைத்துக் தமக்கு அவன் செய்த சிறப்பை விரியக் கூறியுள்ளார். இதன் இடையே சில அடிகள் சிதைந்துவிட்டன. | மென்புலத்து வயலுழவர் வன்புலத்துப் பகடுவிட்டுக் குறுமுயலின் குழைச்சூட்டொடு நெடுவாளைப் பல்லுவியற் | 5. | பழஞ்சோற்றப் புகவருந்திந் | | புகற்றளவின் பூச்சூடி அரிப்பறையாற் புள்ளோப்பி அவிழ்நெல்லி னரியலாருந்து மனைக்கோழிப் பைம்பயிரின்னே | 10. | கானக்கோழிக் கவர்குரலொடு | | நீர்க்கோழிக் கூப்பெயர்க் குந்து வேயன்ன மென்றோளால் மயிலன்ன மென்சாயலார் கிளி கடியின்னே | 15. | அகலள்ளற் புள்ளிரீஇயுந்து |
|