| 5 | திங்க ளன்ன வெண்குடை | | ஒண்ஞாயி றன்னோன் புகழ்மா யலவே. |
திணையும் துறையு மவை. அதியமா னெடுமானஞ்சியை ஒளவையார் பாடியது.
உரை: எறிபுனக் குறவன் குறையல் அன்ன - வெட்டிச் சுட்ட கொல்லை நிலத்துக் குறவனால் தறிக்கப்பட்ட துண்டம் போன்ற; கரிபுற விறகின் ஈம வொள்ளழல் - கரிந்த புறத்தை யுடைய விறகால் அடுக்கப்பட்ட ஈமத்தின்கண் எரிகின்ற ஒள்ளிய அழலின்கண்; குறுகினும் குறுகுக - உடல் சுடச் சென்று அணுகினும் அணுகுக; குறுகாது சென்று - அவ்வாறு அணுகாது போய்; விசும்புற நீளினும் நீள்க - வறிதே ஆகாயத்தை உற ஓங்கினும் ஓங்குக; பசுங்கதிர்த் திங்களன்ன வெண்குடை - குளிர்ந்த சுடரையுடைய மதிபோலும் வெண்கொற்றக் குடையையுடைய; ஒண் ஞாயிறன்னோன் - ஒள்ளிய ஞாயிற்றை யொப்போனது; புகழ் மாயல - புகழ் மாயா; எ- று.
ஈமமென்பது பிணஞ்சுடுதற்கு அடுக்கும் விறகடுக்கு. இனி, ஈமவொள்ளழல் இவனுடல் சிதையாமல் சிறுகினும்சிறுகுக; அன்றிச் சிதையும்படி சென்று நீளினும் நீளுக; இவன் புகழ் மாயாவெனினும் அமையும்.
எரிபுனக் குறவன் என்று பாடமோதுவாரு முளர். விளக்கம்: எறி புனம் - எறிந்த புனம்: இறந்தகாலந்தொக்க வினைத்தொகை. குறைபட வெட்டிய கட்டைத்துண்டு குறையல் எனப்பட்டது. கரிபுற விறகின் ஈமம் என்றதனால், எரிந்து குறைபட்ட கட்டைகளையே பண்டை நாளில் ஈமத்தில் எரிமூட்ட அடுக்குவரென்பது தெரிகிறது. அதியமான் உடல் ஈமத்தீயில் எரிவது கண்டு ஆற்றாது கூறுகின்றாராகலின் குறுகினுங் குறுகுக என்றும், சில கட்டைகள் தீக்கொழுந்துவிட்டெரியினும் தங்கண் இட்ட பொருள் நன்கு வேகச் செய்யாது போவதுண்மையின், குறுகாது சென்று விசும்புற நீளினும் நீளுக என்றும் கூறினார். ஒண் ஞாயிறன்னோன் என்றார், ஞாயிற்றின் ஒளியை மறைக்க முடியாதவாறுபோல அதியமான் புகழ்களும் மாயாவென்று கட்டுரைக்கின்றாராகலான்; புதைத்தலொல்லுமோ ஞாயிற்ற தொளியே (ஐங்.71.) என்று பிறரும் கூறுதல் காண்க. குறுமை, சிறுமையு முணர்த்துமாதலால், குறுகினுங் குறுகுக என்றதற்கு, இவனுடற் சிதையாமற் சிறுகினும் சிறுகுக என்றும், நீளினும் நீளுக என்றதற்கு, சிதையும்படி சென்று நீளுக, இவன் புகழ் மாயாவெனினு மமையும் என்றும் உரைத்தார். --- |