பக்கம் எண் :

73

     

233. வேள் எவ்வி

     வேளிர்குலத் தோன்றலாகிய எவ்வி பறம்புமலைத் தலைவனாகிய
வேள் பாரி பிறந்த குடிக்கு முதல்வன். இவனது ஊர் நீடூர் என்பது. இது
மிழலைக் கூற்றத்தில் உள்ளது. இஃது அறந்தாங்கி வட்டத்துத் தென்
பகுதியும் இராமநாதபுர மாவட்டத்தின் கீழ்ப்பகுதியும் தன்கண் கொண்டது.
அதனால் இவன் “நீடூர் கிழவன்” எனப் படுவன். இவன் பெருங்கொடை
புரியும் வள்ளல். இவன்பால் பாணர்கட்குப் பேரன்புண்டு. வாட்படையும்
வேற்படையும் சிறக்க உடைய இவன் புலவர் பாடும் புகழ் மிகப்
படைத்தவன். ஒருகால் இவன் தன் ஏவலைக் கொள்ளாது பகைத்த
பசும்பூண் பொருந்திலர் என்பாரை வென்று அவர்க்குரிய அரிமணம்
உறத்தூர் என்பன புதுக்கோட்டை வட்டத்தில் உள்ளன. அரிமணம்
இப்போது அரிமளம் என வழங்குவது போலும். வேள் எவ்வி பகைவரொடு
போர் செய்து இறந்தான். அவனால் பெரிதும் பேணப்பட்ட பாணர் தம்
இசைக்கருவியாகிய யாழை முறித்திட்டு அவனைப் பரவி வருந்தினர்:
அவர்கள் பின்பு எய்திய வறுமை புலவர் பரிந்து எடுத்தோதும் அத்துணை
மிகுதி பெற்றிருந்தது. இந்த எவ்வியின் பிரிவாற்றாது வருந்திய
சான்றோர்களுள் வெள்ளெருக்கிலையார் என்பவரும் ஒருவர். “போர்க்குச்
சென்று பெரும் போருடற்றி வீழ்ந்த எவ்வியின் முகத்தினும் மார்பினும்
பட்ட புண்கள் பலவாகும்” எனப் போரிடையிருந்து வந்த செய்தி
வெள்ளெருக்கிலையார்க்கு விடியற்காலத்தே வந்தது. வேள் எவ்வியின் வாள்
வன்மையும் பேராண்மையும் நன்கறிந்தவ ராதலின், அச் செய்தியை அவர்
உண்மையென ஏற்கவில்லை.ஆயினும், அவர் மனம் அமைதி பெறவில்லை.
“இச் செய்தி பொய்யுரையாகுக” என அவர் தமக்குள்ளே விழைந்தார்.
அவ்விழைவின் வெளியீடே இப்பாட்டு. வெள்ளெருக்கின் இலையைச்
சிறப்பித்துப் பாடியதனால் இவர்க்கு இப்பெயர் எய்திற்றாகல் வேண்டும்.

 பொய்யா கியரோா பொய்யா கியரோ
பாவடி யானை பரிசிலர்க் கருகாச்
சீர்கெழு நோன்றா ளகுதைகட் டோன்றிய
பொன்புனை திகிரியிற் பொய்யா கியரோ
5இரும்பா ணொக்கற் றலைவன் பெரும்பூட்
 போரடு தானை யெவ்வி மார்பின்
எஃகுறு விழுப்புண் பலவென
வைகுறு விடிய லியம்பிய குரலே.

   திணையும் துறையும் அவை. வேள் எவ்வியை
வெள்ளெருக்கிலையார் பாடியது.

    உரை: பொய்யாகியரோ பொய்யாகியரோ - பொய்யாகுக கொய்யாகுக;
பாவடியானை பரிசிலர்க்கு அருகா - பரந்த அடியினையுடைய யானையைப்
பரிசிலர்க்குக் குறைவறக் கொடுக்கும்; சீர் கெழு நோன்றாள் - சீர்மை
பொருந்திய வலிய முயற்சியையுடைய;