பக்கம் எண் :

82

     

களிற்றிரைபிழைப்பின் - களிறாகியஇரைதப்பின்;  எலி பார்த்து
ஒற்றாதாகும் - தனக்குஇரையாதற்குப்போதாத எலியைப் பார்த்து
வீழ்த்தாதாகும்; மலி திரைக் கடல் மண்டு புனலின் - மிக்க
திரையையுடைய கடலின்கண் மண்டிய ஆற்று நீர்போல;
இழுமெனச் சென்று விரையப்போய்; நனியுடைப் பரிசில் தருகம்
- மிகுதியை யுடைத்தாகிய பரிசிலைக் கொடு வருவேமாக; எழுமதி
நெஞ்சே - எழுந்திராய் நெஞ்சே; துணிபு முந்துறுத்து - தெளிவை
முன்னிட்டுக்கொண்டு; எ - று.


    நசை பழுதாக அழற் பயந்தாங்குக் கூற்றம் துணிய விடலை மாய்ந்தன
னெனவும், மகளிர் வளைமுறி வாழைப்பூவிற் சிதறவெனவும் துணிபு
முந்துறுத்து நெஞ்சமே எழுவெனவும்கூட்டுக. நோயின்றாக வென்றது
“குறிப்பிற்றோன்றல்” (தொல். பெய.3). ஆங்கது நோயின்றாக வென்றது
இளவெளிமான் சிறிது கொடுப்ப அதனை இகழ்ந்து கூறிய தென்பாருமுளர்.
“புலி பார்த்தொற்றிய களிற்றிரை பிழைப்பின். எலி பார்த் தொற்றாதாகும்”
என்பதூஉம் இவன்பின் கொடுத்த பரிசிலின் சிறுமை நோக்கி நின்றது.

    “ஊழை யுருப்ப எருக்கிய மகளிர்” என்று பாடமோதி விதியை
வெறுப்ப எருக்கிய மகளிர் என்றுரைப்பினு மமையும்.

    விளக்கம்: “கோடைக் காலத்துக் கொழு நிழலாகி” என்ற விடத்து
ஆகுதல் ஒப்புப் பொருள் உணர்த்திநின்றது. “பொய்த்தலறியா வுரவோ”
னென்றதனால், பொய்யாமையாகிய நல்லறம் மிக்க திண்மையுடையார்
பாலேகாணப்படும் என்பதும் தெரிகிறது. பனுவல், நல்லோர் உரைத்த
நல்லுரை. நன்று விளைந்தன்று என இயைத்து நன்றாக விளைந்ததெனப்
பொருள் கூறப்பட்டது. பழுது - பயனின்மை. “அட்ட குழிசி யழற்
பயந்தாங்கு” என்பது பழமொழி. திறன் - கொள்ளத்தக்கார், தாகதார்
எனக் கூறுபடுத்தறியும் அறிவு. அறிவின்மையான், உயிர் கொள்ளத்தகாத
வெளிமான் உயிரைக் கொன்றதென வருந்திக் கூறுகின்றாராதலால்,
“திறனின்று துணிய” என்றார். எருக்குதல் மார்பிலறைந்து கொள்ளுதல்;
இஃது அருக்குதல் எனவும் வழங்கும்; “மகளிர் குரூஉப் பைந்தார்
அருக்கியபூசல்” (அகம். 208) என வருதல் காண்க. களர் நிலமே
புறங்காடாக வகுக்கப்படுவது பற்றி, “கள்ளி போகிய களரியம் பறந்தலை”
யென்றார். “பாறிறை கொண்ட பறந்தலை மாறுதகக், கள்ளி போகிய களரி
மருங்கு” (புறம். 360)என்று பின்னரும் கூறுதல் காண்க. வெளிமான் முதுமை
யெய்து முன்பே இறந்தமை தோன்ற, “வெள்வேல் விடலை சென்று
மாய்ந்தனன்” என்றார். அது, அக் கூற்றம்; சுட்டினைக் கூற்றுக் கேற்றாது
இளவெளிமான் சிறிது கொடுத்தற்கேற்றுதலும் உண்டென்பது தோன்ற
“ஆங்கது.... என்பாருமுளர்” என்று உரைத்தார். களிறாகிய இரையைத்
தின்னும் புலிக்கு எலி சிறிதும் ஆற்றாதாகலின், தனக்கு இரையாதற்குப்
போதாத எலியென்று உரைத்தார்.இள வெளிமான் சிறிது கொடுப்ப மனத்தே
கலக்கமும் சினமும் கொண்டாராதலால், “துணிபுமுந்துறுத்து எழுமதி” என
நெஞ்சை ஒருப்படுத்தினார். பெருவேந்த னல்லனாதலின் இவ்வண்ணம்
கூறினார். பெருவேந்தன் மறுத்த வழிப் “புலம்புமுந் துறுத்துச்” (புறம். 210)
செல்லுப என அறிக.

---