|       | செவி செஞ்சேவலும் பொகுவலும்         வெருவா - செவி சிவந்த கழுகின்          சேவலும் பொகுவலென்னும் புள்ளும் அஞ்சாவாய்: வாய்வன் காக்கையும்          கூகையும் கூடி - வாய் வலிய காக்கையும் கோட்டானும் கூட்டி; பேஎய்          ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் - பேயினத்துடனே தாம் விரும்பிய          வழியே யியங்கும்; காடு முன்னினன் கள் காமுறுநன்; தொடி கழி மகளிரின்          - அவனுடைய வளை கழிக்கப்பட்ட உரிமை மகளிரைப் போல; தொல்          கவின் வாடி - பழைய அழகு தொலைந்து; பாடுநர் கடும்பும் பையென்றன -         பாடுவாரது சுற்றமும் ஒளி மழுங்கின; தோடு கொள் முரசும் கண் கிழிந்தன          - தொகுதி கொண்ட முரசங்களும் கண் கிழிந்தன; ஆளில் வரை போல்          யானையும் மருப்பு இழந்தன - பாகர் முதலாயின ஆளில்லாத மலைபோன்ற         யானைகளும் மருப்பிழந்துவிட்டன. வெந்திறல் கூற்றம் பெரும்போது உறுப்ப         - இவ்வாறு வெவ்விய திறலையுடைய கூற்றம் பெரிய இறந்து பாட்டை          எய்துவிப்ப; எந்தை ஆகுதல் - என்னிறைவன் பேதுறவெய்தி; அதற்படல் -          அவ் விறந்துபாட்டிலே படுதலை; அறியேன் - அறியேனாய்; அந்தோ -          ஐயோ; அளியேன் வந்தனென் -அளித்தலை யுடையேன் வந்தேன்; மன்ற          என்னாகுவர்கொல் என் துன்னியோர் - நிச்சயமாக என்ன துயரமுறுவர்          கொல்லோ என்னையடைந்த சுற்றத்தார்; மாரி இரவின் - மழையையுடைய          இரவின்கண்; மரங்கவிழ் பொழுதின் - மரக்கலங் கவிழ்ந்த காலத்து;          ஆரஞர் உற்ற நெஞ்சமொடு - பொறுத்தற்கரிய துன்பமுற்ற நெஞ்சுடனே;          ஒராங்கு - ஒரு பெற்றிப்பட; கண்ணில் ஊமன் கடற்பட்டாங்கு -          கண்ணில்லாத ஊமன் கடலின்கண் அழுந்தினாற்போல; வரையளந் தறியாத்          திரையரு நீத்தத்து-எல்லையளந்தறியப்படாத திரையரிதாகிய          வெள்ளத்தின்கண்; அவல மறுசுழி மறுகலின் - துன்பமாகிய          மறுசுழியின்கட்பட்டுச் சுழலு மதனில்; தவலே நன்றுமன் - இறந்துபடுதலே          நன்று; தகுதியும் அதுவே - நமக்குத் தக்க செய்கையும் அதுவே; எ - று.
      யான் அது செய்யப் பெற்றிலேன் என்னும் நினைவிற்று.         மன்: கழி          வின்கண் வந்தது. வெருவா வழங்குமென இயையும். முரசும் கண் கிழிந்தன;          யானையும் மருப்பிழந்தன என்ற கருத்து, அவற்றால்தொழில் கொள்வார்          இன்மையின் அவை பயனிழந்தன என்பதாம்.
      விளக்கம்: செவி         செஞ் சேவ லென்பது எதுகை நோக்கி மொழி மாறி          நின்றது: அது செஞ் செவிச் சேவலென நிற்றற்பாலதென்று தெய்வச்சிலையார்         (கிளவி. 25) கூறுவர். இவ்வுரைகாரர், கிடந்தபடியே கொள்வர். செவி          சிவந்தசேவ லென்பது, வாய்வன் காக்கை யென்பதற்குக் கூறப்படும்          உரையோடு வைத்து ஒப்புநோக்கத்தக்கது. ஆகுதல், கூற்றம் புணர்க்கும்          பேதுறவுக்கு இயைதல். அளியேனாதலின் வந்தனென்என்க.  |