| காணுந்திறமும் தன் துயரத்தை அரற்றி யுணர்த்தும் திறமும் இல்லாதவன் என்றற்குக் கண்ணிலூமன் என்றார். துன்பமாகிய வெள்ளமென்பது கருத்தாதல்பற்றி, திரையரு நீத்தம் எனப்பட்டது. வெள்ளமோடும் நெறியே யோடாது மறித்துச்சுழன்று சுழிதலால், மறுசுழி யென்றார். நன்று விளைவின் மேலும், தகுதி செய்கைமேலும் நின்றன. நினைவிற் றென்பது, குறிப்பெச்சத்தாற் கொள்ளக் கிடந்த தென்றவாறு. களிறுகள் மருப்பிழத்தலாவது, தொழில்கொள்ளும் பாகர் இல்லாமையால் பயன்படுதல் இழந்தன என விளக்கினார். ---
239. நம்பி நெடுஞ்செழியன் முடியுடைய வேந்தராகிய பாண்டியர்க்கு வினைவேண்டியவிடத்து அறிவும், படை வேண்டுமிடத்து வெல் படையும் தந்து புகழ் மேம்படு வித்த குறுநிலத் தலைவர் பலருண்டு. அவருள் வினை வகையில் வீறு எய்தியோர்க்குப் பாண்டிவேந்தர் தம்முடைய பெயர்களையே பட்டமாக வழங்குவர். இவ் வழக்கு ஏனைச் சோழர்பாலும் சேரர்பாலும் காணப்படும். இடைக்காலச் சோழ பாண்டியர் காலத்தும் இவ்வழக்காறு இருந்து வந்தது. இவ்வகையில் நம்பி யென்னும் பாண்டிநாட்டுக் குறுநிலத் தலைவன் அரியவினையைச் செய்து முடிவேந்தனாகிய பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரைத் தனக்குப் பட்டமாகப் பெற்றான். அதனால் இவனைச் சான்றோர் நம்பி நெடுஞ்செழியன் என வழங்கினர். இவன் காலத்து முடியுடைப் பெருவேந்தன் பாண்டியன் நெடுஞ்செழியன் எனக் கருதலாம். இப் பாண்டிநாட்டுக் குறுநிலத் தலைவன்பால் இந் நாட்டு வெண்புல நாட்டுப் பேரெயில் (A. R. No. 96 of 1894) என்னும் ஊரினாரன முறுவலார் என்ற நல்லிசைச் சான்றோர் பேரன்பு கொண்டொழுகினார். இவனுடைய பலவாகிய நற்பண்புகள் அனைத்தையும் அவர் பன்முறையும் கண்டு பயின்றிருந்தனர். இருக்கையில், நம்பி நெடுஞ்செழியன் எதிர்பாராவகையில் உயிர் துறந்தான். பிறர் படையால் இறவாமல் கூற்றத்தாற் கொள்ளப்படுபவர் நோலாதவர் என்ற கருத்தால், அக்காலத்துச் சான்றோர், வேல் வாள் முதலிய படைகளால் இறவாதார் உடம்பை, அடக்கம் செய்யுங்கால் படையால் போழ்ந்து நிலத்திற் புதைத்தலோ சுடுதலோ செய்வர். நம்பி நெடுஞ்செழியன் வாள் முதலிய படையாற் புண்பட்டிறவாமையால், செய்யத்தகுவது அறிய வேண்டி அக் காலையில் அங்கே கூடியிருந்த சான்றோர், நல்லிசைச் நெடுஞ்செழியனது எதிர்பாரா இறப்பு அவர்க்குப் பெரும் பேதுறவை விளைத்தது. அவர், நம்பிநெடுஞ்செழியன் அறத்துறை, பொருட்டுறை, இன்பத்துறை யென்ற எல்லாத் துறையிலும் மாசற்க கடைபோகி மாண்புற்றவன். சுருங்கச் சொல்லுமிடத்து அவன் செய்யத் தகுவன வெல்லாம் சிறப்புறச் செய்தானாதலால், அவன் தலையை வாளாற் போழினும் சுடினும் எது செய்யினும் தகுவதாம் என்ற கருத்தமைந்த இப்பாட்டைப் பாடிக் காட்டிப் பரிவுற்றார். | தொடியுடைய தோண்மணந்தனன் கடிகாவிற் பூச்சூடினன் தண்மகமழுஞ் சாந்துநீவினன் |
|