பொருட்பால் உறுப்பியல்-குடி அதிகாரம் 104. உழவுஅஃதாவது அரசனுக்கும் அவனுடைய குடிகட்கும் அல்லது ஒரு நாட்டு மாந்தர்க்கெல்லாம் இன்றியமையாத உணவை விளைப்பதும், கைத்தொழிற்கும் வாணிகத்திற்கும் ஓரளவு கரணிமாயிருப்பதும், அரசியல் நடத்தற்கு வேண்டும் இறையிற் பெரும் பகுதியை நல்குவதும். குடிகளுட் சிறந்த வேளாளர் என்னும் வகுப்பார்க் குரியதும், ஆன பயிர்த்தோழில். அது உழுதலாகிய அதன் முதல் வினை பற்றி உழவு எனப்பட்டது. உழவுத் தொழிலைப் பாண்டியம் என்பது இலக்கிய வழக்கு. பாண்டி- எருது. பண்டியின் துணையாற் செய்யப்படுவது பாண்டியம். "பகடு நடந்த கூழ்" என்று நாலடியார் (2) கூறுதல் காண்க. அரசர்குடி உட்பட எல்லாக்குடிகளும் வாழ்வதற்கும் முன்னேறுவதற்கும் இன்றியமையாதாதலின், இது குடிசெயல் வகையின்பின் வைக்கப்பட்டது. "சிறுபான்மை வாணிகர்க்கும் பெரும்பான்மை வேளாளர்க்கு முரித்தாய உழுதற்றொழில் செய்விக்குங்கால் ஏனையோர்க்கு முரித்து இது மேற்குடியுயர்தற் கேதுவென்ற ஆள்வினை வகையாதலின், குடி செயல் வகையின் பின் வைக்கப்பட்டது" என்னும் பரிமேலழகர் அதிகாரப் பாயிரம், ஆரிய முறை தழுவியதும் பொருளொடு பொருந்தாதது மாதலின், ஈண்டைக்கு ஏற்கா தென்க. |