பக்கம் எண் :

இன்மை யிடும்பை யிரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.

 

இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின்-வறுமைத் துன்பத்தை உழைப்பால் நீக்குவோமென்று கருதாது இரப்பால் நீக்குவோமென்று கருதும் வன்மையைப்போல்; வன்பாட்டதுஇல்-வன்மைபாடுள்ளது வேறொன்றுமில்லை.

முதலாவது; பிறரிடம் ஒன்று ஏற்பதே இகழ்ச்சி; அதையும் இரந்து பெறுதலோ மிக இழிந்தது. மதிப்பாக வுழைத்து மானத்தோடு வாழ இறைவன் கைகால் முதலிய உறுப்புகளைத் தந்திருக்கவும். அவற்றைப் பயன்படுத்தாது இரத்தலை மேற்கொண்டு ஒரே இல்லத்திற் பெறாது தெருத்தெருவாகவும் வீடுவீடாகவும் சென்று, சிறிது சிறிதாகவும் ஒன்றோடொன்றொவ்வாது பல்வேறு வகைப்பட்டனவாகவும், புதியனவும் பழையனவும் சுவையுள்ளனவும் இல்லனவுமாகவும், சில மனைகளில் மறுக்கப்பட்டும் சில மனைகளில் வெறுக்கப்பட்டும், தொல்லைப்பட்டு மானங்கெட்டுத் தொகுத்த மிச்சிலும் எச்சிலுமான வுணவையுண்டு உடம்பு தாங்கி, நாய்போல் திரிய மனங் கொள்வது ஆறறிவு படைத்த மாந்தப் பிறப்பிற்கு எவ்வகையிலும் ஏற்காத மாபெரு வன் செயலாதலின், ’வன்மையின் வன்பாட்ட தில்’ என்றார். இதனால் வறுமை நீக்கும் வழி இரவன்றென்பது கூறப்பட்டது.