அவர் அகத்து ஆற்று அறுக்கும் கல்லாமா அன்னார் - போர் வரு முன்பெல்லாம் தன்னை எந்நிலைமையிலும் தாங்குவது போன்றிருந்து, அது வந்தபின் போர்க்களத்தில் தன்னைக் கீழே தள்ளிவிட்டு ஓடிப்போகும் பயிற்சியில்லாக் குதிரையை ஒத்தவரின்; தமரின் தனிமை தலை - நட்போடிருத்தலினுந் தனித்திருத்தல் சிறந்ததாம். தீய நண்பர் துன்பம் வருமுன்பெல்லாம் நிலையான துணையாவார் போன்றிருந்துவிட்டு, அது வந்தபின் நீங்கிவிடுவரென்பது, உவமத்தாற் பெறப்பட்டது. ஆற்றறுத்தல் என்பதற்கு 798 ஆம் குறளுரையில் உரைத்தது போல் உரைக்க. கல்லாமை போர்ப் பயிற்சியில்லாமை. "ஐந்து கதியும் பதினெட்டுச் சாரியையுங் கந்து மறமுங் கறங்குளைமா" என்பதனால் (பு. வெ. 355) குதிரையின் போர்ப் பயிற்சி அறியப்படும். மல்லம், மயில், குரங்கு, வல்லியம் (புலி) அம்பு எனச் செலவு (கதி) ஐவகை. சாரியை மண்டலம் என்னும் சுற்றுவரவு. ' கந்து ' (வ.) தாண்டு. மறம் - போர்முரண். தமர் - தமர்மை; ஆகுபொருளி. ' தனிமை ' ஏமாற்றமின்மைக்கும் அழிவின்மைக்கும் ஏதுவாதலின் அதைத் ' தலை ' என்றார்.
|